Published : 30 May 2018 08:26 AM
Last Updated : 30 May 2018 08:26 AM
உத்தரபிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நேற்று ஏற்பட்ட கடும் புயல் மற்றும் மழைக்கு இதுவரை 47 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
உத்தரபிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்று காலை அந்த மாநிலங்களில் பலத்த மழையுடன் கூடிய சூறைக்காற்று வீசியது. பிஹாரைப் பொறுத்தவரை, மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதால் பல இடங்களில் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்தன. சிறிய வீடுகள் இடிந்து விழுந்தன.
பிஹாரில் புயலால் வீடு இடிந்து விழுந்தது, மின்னல் தாக்கியது உள்ளிட்ட சம்பவங்களுக்கு இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். அதேபோல், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் நேற்று பலத்த மழையுடன் கூடிய புயல் வீசியது. உத்தரபிரதேசத்தில் குறிப்பாக ரேபரேலி, உன்னாவ், கான்பூர் ஆகிய பகுதிகளில் புயல், மழையால் கடுமையான பாதிப்பு கள் ஏற்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் இடிந்துள்ளன.
உத்தரபிரதேசத்தில் மட்டும் புயல், மழைக்கு 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஜார்க்கண்டில் 13 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இவ்வாறு, மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் இந்தப் பேரிடருக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 47-ஆக உயர்ந்துள்ளது. மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் சார்பில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட 3 மாநிலங்களிலும் அடுத்த 24 மணிநேரத்துக்கு புயலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT