Published : 21 May 2018 08:35 AM
Last Updated : 21 May 2018 08:35 AM
நியூயார்க் நகர காவல்துறையில் டர்பன் அணிந்துகொண்டு பணிபுரியும் வகையில் முதல் சீக்கிய பெண்மணியாக இணைந்துள்ளார் குர்சோத் கவுர்.
நியூயார்க் நகர காவல்துறையில்(என்ஒய்பிடி) இணைய வேண்டுமென்றால் நியூயார்க் நகர போலீஸ் அகாடமியில் இணைந்து பயிற்சியைப் பெறவேண்டும். அந்த வகையில் இந்தியாவைச் சேர்ந்த குர்சோத் கவுர், அகாடமியில் இணைந்து பயிற்சியை முடித்துள்ளார்.
இவர் தலையில் டர்பன் அணிந்து பணிபுரிவதற்கு அனுமதியையும் அதிகாரிகளிடமிருந்து பெற்றுள்ளார். இதன்மூலம் டர்பன் அணிந்து நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் பெண் என்ற சாதனையை குர்சோச் கவுர் செய்துள்ளார்.
இதுதொடர்பாக சீக்கிய அதிகாரிகள் சங்கம் ட்விட்டரில் கூறியதாவது: டர்பன் அணிந்து நியூயார்க் காவல்துறையில் பணிபுரியப் போகும் குர்சோத் கவுருக்கு வாழ்த்துகள். இது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது. உதவி காவல் அதிகாரியாக அவர் இணையவுள்ளார்.
அவருக்கு நியூயார்க் நகர காவல்துறையும், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை இணை அமைச்சர் ஹர்தீப் சிங் புரியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஹர்தீப் சிங் புரி ட்விட்டரில் கூறும்போது, “நியூயார்க் காவல்துறையில் டர்பன் அணிந்த சீக்கிய பெண் அதிகாரியைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதன்மூலம் சீக்கியர்களைப் பற்றியும், சீக்கிய மதத்தைப் பற்றியும் அமெரிக்காவில் உள்ளவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். 2010-ல் எனக்கும், சமீபத்தில் கனடா அமைச்சர் நவ்தீப் பைன்ஸுக்கும் ஏற்பட்ட நிலைமை மீண்டும் அமெரிக்காவில் ஏற்படாது என நம்புகிறேன். நல்லிணக்கத்தின் தூதுவர்களாக சீக்கியர்கள் உள்ளனர்” என்றார்.
2010-ம் ஆண்டில் ஐ.நா. சபை தூதராக ஹர்தீப் சிங் புரி இருந்தபோது, நியூயார்க் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையின்போது அவரது டர்பனை கழட்டுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். டர்பனை கழட்ட அவர் மறுத்தபோது, அவரை ஒன்றரை மணி நேரம் ஒரு அறையில் காத்திருக்க வைத்தனர். அதேபோல சமீபத்தில் கனடா அமைச்சர் நவ்தீப் பைன்ஸுக்கும் நடந்தது குறிப்பிடத்தக்கது.
2016-ம் ஆண்டில் மொத்தம் 160 சீக்கிய அதிகாரிகள் நியூயார்க் காவல்துறையில் பணிபுரிந்து வந்தனர் என் நியூயார்க் நகர போலீஸ் ஆணையர் ஜேம்ஸ் ஓ நீல் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT