Published : 24 May 2018 08:47 AM
Last Updated : 24 May 2018 08:47 AM
நிபா வைரஸ் பாதிப்பில் இறந்த நர்ஸ் லினியின் கணவருக்கு அரசு வேலை மற்றும 2 குழந்தைகளுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க கேரள முதல்வர் பினராயி விஜயன் முடிவு செய்துள்ளார்.
கேரளாவில் வவ்வால்களின் எச்சில், கழிவுகள் மூலம் நிபா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டம் பெரம்புரா பகுதி தாலுகா மருத்துவமனையில் நோயாளிகளை கவனித்து வந்த நர்ஸ் லினி, நிபா வைரஸ் பாதிப்பால் இறந்தார். இவரது கணவர் சஜீஸ் பக்ரைனில் வேலை செய்கிறார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும் 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதல், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், வைரஸ் பாதிப்பால் இறந்த லினியின் கணவருக்கு அரசு வேலை வழங்கவும், 2 குழந்தைகளுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி லினியின் கணவர் சஜீஸின் கல்வித் தகுதிக்கு ஏற்ப, அவருக்கு அரசு வேலை வழங்கப்படும். குழந்தைளின் பெயரில் தலா ரூ.5 லட்சம் வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாக வைக்கப்படும். மீதி 5 லட்சமும் அதேபோல் வைப்புத் தொகையாக வங்கியில் செலுத்தப்படும். அதில் வரும் வட்டித் தொகையை குழந்தைகள் வளர்ப்புக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும்.
அத்துடன் நிபா வைரஸ் பாதிப்பால் இறந்த மற்ற 9 பேரின் குடும்பங்களுக்குத் தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT