Published : 29 May 2024 01:14 PM
Last Updated : 29 May 2024 01:14 PM

‘‘கடவுள் கலவரத்தை தூண்டக் கூடாது’’ - மோடியின் பேச்சுக்கு மம்தா எதிர்வினை

மம்தா | கோப்புப்படம்

கொல்கத்தா: கடவுள்தான் தன்னை அனுப்பி வைத்ததாக பிரதமர் மோடி அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், நரேந்திர மோடி கடவுள் என்றால் அவர் அரசியலில் ஈடுபடக் கூடாது; கலவரத்தை தூண்டக் கூடாது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் அவர் பேசியது. “ஒருவர் சொல்கிறார் அவரை கடவுளுக்கு எல்லாம் கடவுள் என்று. மற்றொருவர் சொல்கிறார் புரி ஜெகந்நாதரே அவருடையே பக்தர் என்று. அவர் கடவுள் என்றால் அரசியலில் ஈடுபட கூடாது. கடவுள் கலவரத்தை தூண்டக் கூடாது.

அவருக்கு கோயில் கட்டுவோம். பிரசாதம், பூக்கள் போன்றவை வழங்குவோம். நான் பல்வேறு பிரதமர்களுடன் பணியாற்றி உள்ளேன். வாஜ்பாய், மன்மோகன் சிங், ராஜிவ் காந்தி, நரசிம்ம ராவ், தேவகவுடா ஆகியோருடன் பணியாற்றி உள்ளேன். ஆனால், இவரைப் போன்ற பிரதமரை நான் பார்த்தது இல்லை. அந்த மாதிரியான பிரதமர் நமக்கு வேண்டவே வேண்டாம்” என மம்தா கூறினார்.

மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரதமர் மோடி அண்மையில் பேட்டியளித்தார். அப்போது எப்போதும் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக பணியாற்றி வருவது எப்படி என்று பிரதமர் மோடியிடம், செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பிரதமர் மோடி அளித்த பதில்: நான் எப்போதும் சோர்வடையாமல் பணியாற்றி வருகிறேன். நான் கடவுளால் இந்த பூமிக்கு அனுப்பப்பட்டவன். நான் சோர்வடையாமல் பணியாற்றுவதற்கு கடவுள் கொடுத்த பரிசுதான் அந்த சக்தி. என் தாயின் மரணத்துக்குப் பின்னர் பலவற்றை சிந்தித்து பார்க்கிறேன். ரத்தமும் சதையும் கலந்த உடல்ரீதியான சக்திதான் அனைவரையும் இயக்குவதாக நினைத்திருந்தேன். அப்படி இல்லையென்பதை இப்போது உணர்கிறேன். அவற்றை நான் ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். மற்றவர்கள் இதனை விமர்சிக்கலாம், அதற்கு எதிராக சொல்லலாம். ஆனால், நான் அவற்றை முழுமையாக நம்புகிறேன். என்னை இந்த பூமிக்கு அனுப்பியதே அந்த கடவுள்தான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x