Published : 27 Apr 2018 08:50 AM
Last Updated : 27 Apr 2018 08:50 AM
இந்தியா, சீனா இடையிலான உறவில் நீண்டகால அடிப்படையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சிக்கிம் மாநில எல்லையை ஒட்டிய டோக்லாம் பகுதியில் இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதல் 73 நாட்களுக்கு நீடித்தது. இதனால் இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், இதை சரிசெய்யும் வகையில் இருதரப்பு உச்சி மாநாடு சீனாவின் வுஹான் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று அந்நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக மோடி வெளியிட்ட அறிக்கையில், “சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேச உள்ளேன். அப்போது, இருதரப்பு மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்படும். குறிப்பாக, இப்போதுள்ள சர்வதேச சூழலில், இரு நாடுகளின் வளர்ச்சி தொடர்பான தொலைநோக்கு திட்டங்கள் மற்றும் முன்னுரிமை வழங்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளோம். மேலும் நீண்டகால அடிப்படையில் இந்தியா, சீனா இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி தொடர்பாக மறு ஆய்வு செய்யப்படும்” என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை துணை அமைச்சர் கோங் ஜுவான்யு கூறும்போது, “இரு நாடுகளுக்கிடையே உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவர்” என்றார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT