Published : 12 Apr 2018 09:43 AM
Last Updated : 12 Apr 2018 09:43 AM

நடிகர் ராணா சகோதரர் மீது நடிகை ஸ்ரீரெட்டி சரமாரி புகார்: புகைப்படங்கள் வெளியானதால் தெலுங்கு திரையுலகம் அதிர்ச்சி

தெலுங்கு திரையுலகில் பல பெண்களை நடிக்க வைப்பதாக மோசம் செய்து அவர்களின் வாழ்வை நாசமாக்குகின்றனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி, அரை நிர்வாண போராட்டம் நடத்தி தெலுங்கு திரையுலகை கதி கலங்க வைத்துக்கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீரெட்டி, சமீபத்தில் பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராணாவின் சகோதரரும் தன்னை ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து, 2 தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ரீரெட்டி. அதன் பின்னர் இவருக்கு சினிமா வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில், இவர், தன்னையும், தன்னைப்போன்று தெலுங்கு படங்களில் நடிக்க ஆசையாக வரும் அப்பாவி பெண்களையும் சில திரையுலக பிரபலங்கள் ஏமாற்றி அவர்களின் வாழ்க்கையை நாசமாக்கி வருவதாக சமூக வலைத்தளங்கள் மூலம் கடுமையாக குற்றம் சாட்டினார். இது குறித்து சிலரின் பெயர்களையும் அவர் வெளியிட்டிருந்தார். இதனால் தெலுங்கு திரையுலகத்தை சேர்ந்த சிலர் அதிர்ச்சி அடைந்து, ஸ்ரீரெட்டி மீது தெலுங்கு ஃபிலிம் சேம்பரில் புகார் அளித்தனர். அதன்பேரில் ஹைதராபாத் போலீஸ் நிலையத்தில் ஸ்ரீ ரெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து, தெலங்கானா முதல்வர் விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்ரீரெட்டி சமூக வலைத்தளம் மூலமாக முதல்வர் கே.சந்திரசேகர ராவிற்கு கோரிக்கை விடுத்திருந்தார். எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஸ்ரீரெட்டி கடந்த சனிக்கிழமையன்று, ஹைதராபாத்தில் உள்ள ஃபிலிம் சேம்பர் அலுவலகம் முன் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார். இது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. பின்னர் இவரை போலீஸார் கைது செய்து, சமாதானப்படுத்தி அனுப்பினர்.

இந்நிலையில், நடிகை ஸ்ரீரெட்டிக்கு தெலங்கானாவிலும், ஆந்திராவிலும் ஆதரவு பெருகி வருகிறது. பல்வேறு மகளிர் அமைப்பினர், உஸ்மானியா பல்கலை மாணவர் சங்கத்தினர், மற்றும் சில தெலுங்கு நடிகர்கள், நடிகைகள் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். இதனிடையே, நேற்று, பிரபல தயாரிப்பாளர் சுரேஷ்பாபுவின் மகனும், நடிகர் ராணாவின் தம்பியுமான அபிராம், தனக்கு நடிக்க வாய்ப்பு வழங்குவதாக கூறி, அவரது ஸ்டுடியோவிற்கு வரவழைத்து, வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டினார். அதற்கான சாட்சி என அபிராம் தன்னோடு நெருக்கமாக உள்ள ஒரு புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். மேலும், இதுகுறித்து 2 தெலுங்கு தொலைக்காட்சிகளுக்கும் பரப்பரப்பாக நேற்று பேட்டி அளித்தார். இது தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x