Published : 11 Apr 2018 12:09 PM
Last Updated : 11 Apr 2018 12:09 PM

‘‘தலைமை நீதிபதியே வழக்குகளை ஒதுக்கீடு செய்வார்’’ - விதிமுறை வகுக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

வழக்குகளை நீதிபதிகளுக்கு ஒதுக்கீடு செய்வதற்கான விதிமுறைகளை உருவாக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது, நான்கு மூத்த நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். முக்கிய வழக்குகளை குறிப்பிட்ட சில வழக்குகளை மூத்த நீதிபதிகளின் அமர்வுக்கு ஒதுக்காமல், தனக்கு வேண்டிய சில நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு ஒதுக்கீடு செய்வதாக புகார் தெரிவித்தனர். நாடுதழுவிய அளவில் மிக முக்கிய வழக்குகள் குறிப்பிட்ட சில அமர்வுகளுக்கு ஒதுக்கப்படுவதாகவும் அவர்கள் புகார் கூறினர்.

உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகிய நான்கு பேரும், இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முதன் முறையாக பேட்டியளித்தது, நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வழக்குகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக விதிமுறைகளை உருவாக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கன்வில்கர் மற்றும் டி.ஓய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றம் சுமூகமாக நடைபெறவும், வழக்குகள் உரிய நேரத்தில் விசாரிக்கப்படவும் தலைமை நீதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமை எனக்கூறி பொதுநல மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். நீதித்துறையின் தலைமை நிர்வாகியாக இருப்பவர் தலைமை நீதிபதி, எனவே வழக்குகளை முடிவு செய்யும் அதிகாரம் அவருக்கு உண்டு, இதற்காக விதிமுறைகள் வகுக்க முடியாது, தலைமை நீதிபதி மீது நம்பிக்கையின்மை ஏற்படுத்துவதையும் ஏற்க முடியாது எனவும் நீதிபதிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x