Last Updated : 24 Apr, 2018 02:32 PM

 

Published : 24 Apr 2018 02:32 PM
Last Updated : 24 Apr 2018 02:32 PM

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆபாச இணையதளங்களே காரணம்: பாஜக அமைச்சர் சர்ச்சை கருத்து

 குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆபாச இணையதளங்கள்தான் காரணம் என மத்தியப் பிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்சர் பூபேந்திர சிங் கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா எனும் பகுதியில் 8 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது சர்வதேச அளவில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு மிகப்பெரும் அளவில் எதிர்ப்புக் குரல் எழவே, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை கடந்த 21-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, மறுதினமே, ஞாயிற்றுக்கிழமை அச்சட்டத்திருத்தத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில், பாஜக ஆட்சி செய்யும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்சர் பூபேந்திர சிங் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளிக்கும்போது, “இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆபாச இணையதளங்கள் தான் காரணம்” என தெரிவித்தார்.

மேலும், மத்தியப் பிரதேசத்தை ஆளும் பாஜக அரசு 25 ஆபாச இணையதளங்களை முடக்கியுள்ளதாக பூபேந்திர சிங் தெரிவித்தார்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தோர் நகரில் கடந்த 19-ம் தேதி, 4 மாத குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், அமைச்சர் பூபேந்திர சிங் இவ்வாறு கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x