Published : 06 May 2024 09:25 AM
Last Updated : 06 May 2024 09:25 AM

1951-52 மக்களவை தேர்தலில் பெயர் சொல்ல விரும்பாத பெண்கள்: இந்திய தேர்தல் ஆணையம் குழப்பம்

சுதந்திர இந்தியாவில் 1951-52-ல் முதன் முறையாக ஜனநாயக முறைப்படி மக்களவை தேர்தல் நடைபெற்றது. அப்போது இந்திய தேர்தல் ஆணையத்துக்கு புதிய பிரச்சினை தலை தூக்கியது. வாக்காளர் பட்டியல் தயாரிக்கும்போது, ஏராளமான பெண்கள் தங்களின் பெயர்களை கூற விரும்பவில்லை. அதற்குப் பதில், அவர்களின் கணவர் பெயரையோ அல்லது தந்தை, அண்ணன், தம்பி ஆகியோரின் பெயர்களையோ குறிப்பிட்டு, அவர்களுக்கு இவர்கள் என்ன உறவோ அதனை தெரிவித்தனர். பிஹார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இப்பிரச்சினை அதிகமாக இருந்தது.

அந்த கால கட்டத்தில் நாட்டின் பெண் வாக்காளர்கள் ஏறக்குறைய 8 கோடி பேர் இருந்தனர். இவர்களில் சுமார் 30 லட்சம் பேர் தங்களின் கணவர் அல்லது தந்தையின் பெயரை சொல்லி, அவர்களின் மனைவி அல்லது மகள் என கூறியிருந்தனர். இதனால் வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும், பெண்கள் தங்களின் பெயர்களை கூற சுமார் ஒரு மாதம் வரை கால அவகாசத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது. அதன் பிறகு, பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் மட்டுமே தங்களின் பெயர்களை கூறினர். ராஜஸ்தான் பெண்கள் யாரும் பெயர் கூறவில்லை. இதனால் ஒரு மாத கால அவகாசத்துக்கு பின்னர், மீதமிருந்த சுமார் 28 லட்சம் பெண்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

கடந்த 26.1.1950-ம் ஆண்டு இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. இதற்கு ஒரு நாள் முன்னர், 25.1.1950-ல் இந்திய தேர்தல் ஆணையம் உருவானது. இந்த ஆணையம் இதுவரை 17 மக்களவை தேர்தல்களை நடத்தியுள்ளது. முதன்முறை தேர்தலை நடத்தும்போது இந்திய தேர்தல் ஆணையம் பல சவால்களை எதிர்கொண்டது. அந்த கால கட்டத்தில் கல்வி அறிவு இல்லாதவர்கள் அதிகம். இதனால் கல்வியறிவை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது ஆண் வாக்காளர்களை விட பல தொகுதிகளில் பெண் வாக்காளர்களே அதிக எண்ணிக்கையில் வாக்குப்பதிவில் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர்.

கடந்த 1951-52 மக்களவை தேர்தலில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை தவிர நாடு முழுவதும் 17.3 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இதில், 45 சதவீதம் பேர் பெண் வாக்காளர்கள். கடந்த 2019-ல் மொத்த வாக்காளர்கள் 91.1 கோடி. அவர்களில் 43.85 கோடி பேர் பெண் வாக்காளர்கள். ஆண்கள் 47.34 கோடி. முதல் மக்களவை தேர்தலில் பெண்களுக்காக 27,527 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. கடந்த 2019-ல் 67.4 கோடி வாக்காளர்கள் பங்கேற்றனர். அவர்களில் ஆண்களை விட பெண் வாக்காளர்களின் சதவீதமே அதிகம். அப்போது மொத்தம் 67.18 சதவீதம் பெண்கள் வாக்களித்தனர். 67.01% ஆண் வாக்காளர்கள் வாக்களித்தனர். 2024
மக்களவை தேர்தலில் 47.1 கோடி பெண் வாக்களர்கள் இடம் பெற்றுள்ளனர். 12 மாநிலங்களில் ஆண்களைவிட பெண் வாக்களர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x