Published : 03 May 2024 07:32 PM
Last Updated : 03 May 2024 07:32 PM

மக்களவைத் தேர்தலால் கேஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீனை பரிசீலிக்கிறது உச்ச நீதிமன்றம்

அரவிந்த் கேஜ்ரிவால் | கோப்புப்படம்

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று அமலாக்கத் துறையிடம் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை தன்னை கைது செய்ததற்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா அடங்கிய அமர்வு விசாரணை செய்து வருகிறது. வெள்ளிக்கிழமை நடந்த விசாரணையின்போது, அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜுவிடம், ‘கைது நடவடிக்கையை எதிர்த்து அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்திருக்கும் மனு மீதான விசாரணைக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம்" என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

அப்போது, அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு இடைகால ஜாமீன் வழங்க கூடுதல் சொலிசிட்டர் ராஜு எதிர்ப்பு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், “நாங்கள் இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து விசாரிப்போம் என்று கூறினோம். இடைக்கால ஜாமீன் வழங்குவோம் என்று கூறவில்லை. இடைக்கால ஜாமீன் வழங்கலாம், வழங்காமலும் இருக்கலாம்” என்று தெரிவித்தனர். மேலும், அடுத்த முறை இடைக்கால ஜாமீன் குறித்த விசாரணைக்குத் தயாராக வரும்படி கூறி வழக்கை மே 7-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

முன்னதாக, ஏப்.9-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் ‘முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதில் சட்டவிரோதம் எதுவும் இல்லை’ என்று தெரிவித்தது. மேலும், கேஜ்ரிவால் சம்மன்களை மீண்டும் மீண்டும் நிராகரித்து, விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால், அமலாக்கத் துறைக்கு சிறிய வாய்ப்பு கிடைத்தது என்று தெரிவித்தது.

மதுபான கொள்கை பணமோசடி வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் 21-ம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்றக் காவலில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் மே 7-ம் தேதியுடன் நிறைவடைகிறது. கடந்த 2021-22-ம் ஆண்டு டெல்லியில் புதிதாக உருவாக்கி செயல்படுத்தப்பட்ட மதுபான கொள்கையில் முறைகேடு மற்றும் பணமோசடி நடந்திருப்பதாக விசாரணை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x