Published : 03 May 2024 12:25 PM
Last Updated : 03 May 2024 12:25 PM

“அச்சப்பட்டு ஓட வேண்டாம்” - ரேபரேலியில் போட்டியிடும் ராகுல் மீது பிரதமர் மோடி விமர்சனம்

புதுடெல்லி: காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி அமேதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ரேபரேலி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது.

மேற்கு வங்கத்தில் ஒரு பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பேசிய பிரதமர் மோடி, “வயநாட்டில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தால் இளவரசர் போட்டியிட வேறு தொகுதியைத் தேடிக் கொண்டிருக்கிறார் என நான் ஏற்கெனவே சொல்லியிருந்தேன். இப்போது அமேதியிலிருந்து ஓடிப்போய் ரேபரேலியை அவர் தேர்வு செய்துள்ளார். இவர்கள்தான் ஊர் ஊராகச் சென்று அஞ்சாதீர்கள் எனப் பிரச்சாரம் செய்பவர்கள். நான் அவர்களுக்கு அதையே திருப்பிச் சொல்கிறேன். அச்சப்பட்டு ஓடாதீர்கள்” என்று கூறியுள்ளார்.

அமித் மாள்வியா தாக்கு - அதேபோல், பாஜக தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாள்வியா தனது சமூக வலைதளப் பக்கத்தில், “இறுதியாக, ராகுல் காந்தி அமேதியை கைவிட்டுவிட்டார். இதில் ஆச்சரியப்படுவதற்கும் ஏதும் இல்லை. தோற்பவர்கள் இப்படித்தான் செய்வார்கள். அமேதியில் வெற்றி பெற முடியாது என்பதை தொகுதியை மாற்றியதன் மூலம் ராகுல் காந்தி நிரூபித்துவிட்டார். அப்படியிருக்க இனியும் இண்டியா கூட்டணியில் வாக்குகளை யாரும் வீணடிக்காதீர்கள். மூன்றாவது கட்ட தேர்தல் முதல் என்டிஏ கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இன்னும் அமோகமாக இருக்கும்.

அதுமட்டுமல்லாமல் ராகுல் காந்தி கூடாரம் பிரியங்கா அரசியலில் பெரிதாக வளர விரும்பவில்லை என்பதை மீண்டும் அப்பட்டமாக உணர்த்தியுள்ளது. இந்த சகோதர யுத்தம் இன்னும் எப்படியெல்லாம் உருவெடுக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். இப்போதைக்கு ராகுல் கூடாரத்தால் பிரியங்கா காந்தி மீண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளார்” எனப் பதிவிட்டுள்ளார்.

ஆஸ்தான தொகுதிகள்: நீண்ட எதிர்பார்ப்புக்குப் பின்னர் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி வேட்பாளராக ராகுல் காந்தியும், அமேதி வேட்பாளராக கே.எல்.சர்மாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் காந்தி குடும்பத்தின் ஆஸ்தான தொகுதிகளாக இருப்பது அமேதி மற்றும் ரேபரேலி. அமேதியில் கடந்த 1967 முதல் காங்கிரஸ் வெற்றி பெற்று வருகிறது. 1980-ல் சஞ்சய் காந்தி மூலமாக அமேதி காங்கிரஸ் தலைமையின் குடும்பத் தொகுதியாக மாறியது. அதே வருடம் சஞ்சய் காந்திக்கு பின் அங்கு வந்த இடைத்தேர்தலில் ராஜீவ் காந்தி முதன்முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி தொடர்ந்து 1984, 1989, 1991 வரை எம்பியாக இருந்தார். அவரது மறைவால் வந்த இடைத்தேர்தலில் காந்தி குடும்பத்திற்கு நெருக்கமான கேப்டன் சதீஷ் சர்மா போட்டியிட்டு வெற்றி அடைந்தார். இதற்கு அடுத்து வந்த 1996 பொதுத் தேர்தலிலும் சர்மா, அமேதி எம்பியானார். பிறகு 1998-ல் பாஜகவின் சஞ்சய் சிங் கைக்கு அமேதி மாறியது.

அமேதி களத்தில் 1999-ல் அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியால், மீண்டும் அது காங்கிரஸ் வசமானது. இவர், அடுத்த தேர்தலில் அருகிலுள்ள ரேபரேலிக்கு மாறிவிட, அமேதியில் ராகுல் 2004-ல் முதன்முறையாக களம் இறங்கினார். அடுத்து வந்த 2009, 2014, 2019 மக்களவை தேர்தலிலும் என அமேதியில் மூன்று முறை தொடர்ந்தார் ராகுல். இதில், 2014 முதல் பாஜவுக்காக ராகுலை எதிர்த்த மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானி, 2019-ல் ராகுலை தோற்கடித்தார்.

கடந்த 2002 முதல் அமேதி தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்த ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டதால் அங்கு வெற்றி பெற்றதை அடுத்து அவர் மக்களவை உறுப்பினராக தொடர்ந்து இருந்து வருகிறார். ரேபரேலியில் சோனியா காந்தி வெற்றி பெற்றார். தற்போது அவரும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகிவிட்டார். இப்போது ராகுல் காந்தி ரேபரேலியில் களமிறங்குகிறார். அவருக்கு ரேபரேலி வெற்றி மாலை கொடுக்கிறது என்பதைப் பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x