Published : 29 Apr 2018 08:34 AM
Last Updated : 29 Apr 2018 08:34 AM
கர்நாடகாவில் வருகிற மே 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 224 இடங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுவதால் காங்கிரஸ், பாஜக, மஜத உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நேற்று பாகல்கோட்டை மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:
கர்நாடகாவில் 5 ஆண்டுகள் ஊழல் அரசை நடத்திய சித்தராமையா மீது மக்கள் கோபம் அடைந்துள்ளனர். அவர் தோல்வி அடைவது உறுதியாகிவிட்டது. தோல்வி பயணத்தின் காரணமாகவே சித்தராமையா இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
இதுவரை நாடு முழுவதும் நடைபெற்ற 12 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் தோல்வியடைந்தது. தற்போது கர்நாடகாவிலும் காங்கிரஸ் தோல்வி அடைய போகிறது. காங்கிரஸ் அரசின் தோல்வி காலம் நெருங்கிவிட்டது. நிச்சயமாக இன்னும் ஒரு மாதத்தில் பாஜக ஆளும் மாநிலமாக கர்நாடகா மாறும்.
எடியூரப்பா விரைவில் கர்நாடக முதல்வராக பொறுப்பேற்க போகிறார். மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி செய்தால், கர்நாடகா நாட்டின் முதல் மாநிலமாக உயரும். ஊழல் இல்லாத, நல்லாட்சியை கர்நாடக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு வளர்ச்சி நிறைந்த நல்லாட்சியை பாஜக வழங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT