Published : 27 Apr 2018 08:51 AM
Last Updated : 27 Apr 2018 08:51 AM

தேசிய அளவில் உருவாக்கப்படும் பாஜக.வுக்கு எதிரான கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை ஏற்க முடியாது: திரிணமூல் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி திட்டவட்டம்

பாஜகவுக்கு எதிரான தேசிய அளவிலான கூட்டணியில் காங்கிரஸ் பங்குதாரராக சேரலாமே தவிர கூட்டணியின் தலைவராக இருக்க முடியாது என்று மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில் கூறியதாவது:

சமீபத்தில் நடந்த திரிபுரா சட்டப்பேரவை தேர்தலின்போது, பாஜகவுக்கு எதிராக எங்கள் கட்சியோடும் பழங்குடியின அமைப்புகளோடும் கூட்டணி அமைக்குமாறு ராகுல் காந்தியிடம் கூறினேன். தொகுதிகளை சமமாக பிரித்துக் கொள்ளலாம் என்றும் கூறினேன். ஆனால், காங்கிரஸ் எனது யோசனையைக் கேட்கவில்லை. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை பதவி நீக்க காங்கிரஸ் நோட்டீஸ் கொடுத்தது தவறு. நாடாளுமன்றத்தில் எங்கள் கட்சியின் ஒத்துழைப்பை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகின்றனர். மேற்கு வங்கத்தில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் எங்களுக்கு எதிராக செயல்படும்போது எப்படி எங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியும்?

பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் நாங்கள் அமைக்கப்போகும் கூட்டணியில் காங்கிரஸ் ஒரு பங்குதாரராக சேரலாமே தவிர, கூட்டணியின் தலைவராக சேர முடியாது. கூட்டணிக்காக காங்கிரஸ் இந்த தியாகத்தை செய்ய வேண்டும். கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் கொள்கைகளை பின்பற்றும்போது காங்கிரசும் பின்பற்ற வேண்டும். கூட்டணியில் மாநிலங்களில் எந்தக் கட்சி பலமாக இருக்கிறதோ அந்தக் கட்சி பாஜகவுடன் நேருக்கு நேர் மோதட்டும். அப்போதுதான் பாஜகவை வீழ்த்த முடியும்.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x