Last Updated : 30 Apr, 2024 07:05 PM

 

Published : 30 Apr 2024 07:05 PM
Last Updated : 30 Apr 2024 07:05 PM

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்.பி.யுமான சீனிவாச பிரசாத் காலமானார்

சீனிவாச பிரசாத்

பெங்களூரு: மைசூரு மாகாணத்தில் பாஜக வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய எம்.பி.யுமான சீனிவாச பிரசாத் உடல் நலக்குறைவால் பெங்களூருவில் இன்று காலமானார். அவருக்கு வயது 76.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் கடந்த 1947-ம் ஆண்டு பிறந்த சீனிவாச பிரசாத் 1974-ல் ஜனதா கட்சியில் சேர்ந்தார். பட்டியலின வகுப்பை சேர்ந்த இவர் பழைய‌ மைசூரு மாகாணத்தில் முக்கிய தலைவராக விளங்கினார். கருத்து வேறுபாட்டின் காரணமாக ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், சமஜா கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் இணைந்தும், விலகியும் பணியாற்றினார்.

கடந்த 2017-ல் தற்போதைய முதல்வர் சித்தராமையாவுடன் மோதல் ஏற்பட்டதால், பாஜகவில் இணைந்தார். அதன்பிறகே பாஜக சாம்ராஜ்நகர், மைசூரு உள்ளிட்ட பழைய மைசூரு மாகாணங்களில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நெருக்கமானவராக மாறினார்.

சீனிவாச பிரசாத் அடிக்கடி கட்சி மாறினாலும் பட்டியலின மக்களின் உரிமை கொள்கையை மாற்றிக்கொள்ளவில்லை. இதனால் 6 முறை மக்களவை எம்பியாகவும், 2 முறை எம்எல்ஏவாகவும் வெற்றி பெற்றார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் உணவுத்துறை அமைச்சராகவும், சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

சீனிவாச பிரசாத் கடந்த மார்ச் 18-ம் தேதி, அரசியலில் 50 ஆண்டுகள் நிறைவு செய்து பொன் விழாவை கொண்டாடினார். அப்போது, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து முதல்வர் சித்தராமையா அவரை சந்தித்து காங்கிரஸுக்கு ஆதரவு கோரினார். ஆனால், சீனிவாச பிரசாத் பாஜகவை ஆதரிக்குமாறு தன் தொண்டர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1.45 மணியளவில் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்குகள் மைசூருவில் டாக்டர் அம்பேத்கர் கல்வி குழும அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது. சீனிவாச பிரசாத்தின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் சித்தராமையா, முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x