Published : 26 Apr 2024 08:43 AM
Last Updated : 26 Apr 2024 08:43 AM

ஆந்திராவில் வேட்பு மனு தாக்கல் நிறைவு: 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 4,210 பேர் போட்டி

கோப்புப்படம்

ஆந்திர மாநிலத்தில் நேற்று பிற்பகல் 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. இதில் 175 சட்டப்பேரவைக்கு மொத்தம் 4,210 வேட்பாளர்களும், 25 மக்களவை தொகுதிகளுக்கு 731 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 25 மக்களவை தொகுதிகளுக்கும் வரும் மே மாதம் 13-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. இதனையொட்டி, நேற்று மதியம் 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது.

மொத்தமுள்ள 175 பேரவை தொகுதிகளுக்கு 4,210 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 25 மக்களவை தொகுதிகளுக்கு 731 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நிறைவு நாளையொட்டி நேற்று அதிகமானோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இதில், புலிவேந்துலா தொகுதியில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வேட்பு மனு தாக்கல் செய்தார். மேலும் பாஜக, தெலுங்கு தேசம், ஜனசேனா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் அவரவர் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

திருப்பதி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று மதியம் சந்திரகிரி தொகுதியை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் நானி வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு வெளியே வரும்போது, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதே தொகுதி வேட்பாளர் மோஹித் ரெட்டியும் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.

இதனால், இரு பிரிவினருக்கும் இடையே முதலில் காரசாரமான வாக்குவாதங்கள் நடந்து, அது கடைசியில் கைகலப்பில் முடிந்தது. பின்னர் போலீஸார் தலையிட்டு இரு பிரிவினரையும் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.

வேட்பு மனுக்களை வரும் 29-ம் தேதிக்குள் வாபஸ் பெறலாம். அதன் பின்னர் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். இதனை தொடர்ந்து வரும் மே மாதம் 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன் மாதம் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x