Published : 26 Apr 2024 08:11 AM
Last Updated : 26 Apr 2024 08:11 AM

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை திருட காங். திட்டம்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பிரதமர் மோடி

மதரீதியிலான இடஒதுக்கீட்டுக்காக பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை திருடகாங்கிரஸ் திட்டமிட்டிருக்கிறது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில் நேற்று பாஜக பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

ஆக்ராவுக்கு வரும்போதெல்லாம் ஏதாவது நலத்திட்டங்களை தொடங்கி வைப்பேன். இந்த முறை வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க உங்கள் ஆசியை கோரி வந்துள்ளேன். நாடு வளர்ச்சி அடைந்தால் நீங்கள் வளம் அடைவீர்கள். உங்கள் பிள்ளைகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும்.

ஆக்ராவில் பாதுகாப்பு தொழில் வழித்தடம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் ராணுவதளவாட உற்பத்தியில் நமது நாடு தன்னிறைவை எட்டும். நமது ராணுவம் மேலும் வலிமை அடையும். ஆனால் எதிர்க்கட்சியினருக்கு நமது நாடு, ராணுவத்தின் நலனில் அக்கறை கிடையாது.

நாங்கள் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் நலத்திட்டங்கள் அனைத்து சமூகத்தினரையும் சென்றடைந்து இருக்கிறது. ஆனால் காங்கிரஸும் இண்டியா கூட்டணியும் வாக்கு வங்கி அரசியலில் தீவிரம் காட்டி வருகின்றன.

முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கை: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை 100 சதவீதம் முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கை போன்று உள்ளது. அந்தகட்சியின் தேர்தல் அறிக்கை வாக்கு வங்கி அரசியலை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதே நேரம் நாட்டை வலுப்படுத்தும் நோக்கில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

அம்பேத்கர் வரையறுத்த அரசமைப்பு சாசனத்தில் மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி மதரீதியிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டமிட்டு உள்ளது.

நான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன். பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த இடஒதுக்கீட்டை குறைத்து மதரீதியிலான இடஒதுக்கீட்டுக்கு வழங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இது திட்டமிட்ட இடஒதுக்கீடு திருட்டு ஆகும். பிற்படுத்தப்பட்டோர் மட்டுமன்றி பட்டியலின மக்களின் இடஒதுக்கீட்டையும் திருட காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடத்தி வருகிறது. அந்த மாநிலத்தில் ஒரே இரவில் பல்வேறு முஸ்லிம் சாதிகள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கு ஓபிசி அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. இது இடஒதுக்கீடு திருட்டா, இல்லையா என்பதற்கு மக்கள்தான் பதில் அளிக்க வேண்டும்.

காங்கிரஸ்-சமாஜ்வாதி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றால் மக்களின் செல்வங்கள் கொள்ளையடிக்கப்படும். உங்களிடம் 4 அறைகள் கொண்ட வீடு இருந்தால், இரு அறைகளை சமாஜ்வாதியும் காங்கிரஸும் வலுக்கட்டாயமாக பறித்துவிடும். உங்கள் நிலங்களையும் இரு கட்சிகளும் இணைந்து பறிக்கும்.

இண்டியா கூட்டணியின் ஊழல் தலைவர்களுக்கு எதிராக பாஜக தீரமாகப் போரிட்டு வருகிறது. ஏழைகளின் சொத்துகளை அவர்கள் கொள்ளையடிக்க முயற்சிசெய்கின்றனர். அவர்களை தடுத்து நிறுத்துவோம். மக்களின் பணத்தை, மக்களுக்கே திருப்பி அளிப்போம்.

தற்போதைய மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இரு சிறுவர்கள் (ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ்) சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளனர். அவர்களின் ஊழல் கூட்டணிக்கு மக்கள் தகுந்தபாடம் கற்பிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x