Published : 26 Apr 2024 07:47 AM
Last Updated : 26 Apr 2024 07:47 AM

காங். தேர்தல் அறிக்கை: பிரதமருக்கு கார்கே கடிதம்

கோப்புப்படம்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன் என்று அந்த கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்தியில் ஆளும் பாஜக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காக மட்டுமே செயல்படுகிறது. உணவு வகைகள், உப்புக்கு கூட ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். நாங்கள் ஏழைகள், பணக்காரர்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வு குறித்து பேசுகிறோம். ஆனால் நீங்கள் (மோடி), காங்கிரஸின் கருத்தை திரித்து இந்துக்கள், முஸ்லிம்களை ஒப்பிட்டு பேசுகிறீர்கள்.

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், ஜெயின், பவுத்த மதம் என அனைத்து தரப்பினரின் நலன்களை கருத்தில் கொண்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளோம். ஆனால் நீங்கள் உங்களது பழைய உறவை இன்னும் மறக்கவில்லை என்றே கருதுகிறேன்.

அதாவது சுதந்திரத்துக்கு முன்பாக முஸ்லிம் லீக், ஆங்கிலேய ஆட்சியாளர்களுடன் நீங்கள் சுமுகஉறவு கொண்டிருந்ததை இன்னும் மறக்கவில்லை. கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு கார்ப்பரேட் நிறுவனங்களின் பல லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் மக்களின் பணம், கார்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டிருக்கிறது.

பாஜக ஆட்சியில் விவசாயிகளின் கடனோ, கல்விக் கடனோ, குறு, சிறு நிறுவனங்களின் கடனோ இதுவரை தள்ளுபடி செய்யப்படவில்லை. மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநில கலவரத்தில் பெண்களுக்கு எதிராகநடத்தப்பட்ட கொடூரங்களுக்கு யார் பொறுப்பு? பட்டியலின பெண்கள் தொடர்ச்சியாக பாலியல்வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

இதில் தொடர்புடைய நபர்களுக்கு பாஜக சார்பில் மாலைகள் அணிவித்து வரவேற்பு அளிக்கப்படுகிறது. இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பல்வேறு சாதிகள், சமுதாயங்களை சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.

அந்த தேர்தல் அறிக்கையின் அர்த்தம் புரியவில்லை என்றால் உங்களை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன். நீங்கள் இனிமேலும் தவறான தகவல்களை வெளியிடக்கூடாது. இவ்வாறு கார்கேவின் கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x