Published : 25 Apr 2024 05:43 AM
Last Updated : 25 Apr 2024 05:43 AM

அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் சிஐஎஸ்எப் பாதுகாப்பு கோரி வழக்கு: கண்காணிப்பை உறுதி செய்ய நீதிபதிகள் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ளஅனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் கண்காணிப்பை உறுதி செய்ய உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் சிஐஎஸ்எப் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் சிஐஎஸ்எப் போலீஸாரின் பாதுகாப்பை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் விரிவுபடுத்தக்கோரியும், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உயர் நீதிமன்றத்தையும், கீழமைநீதிமன்றங்களையும் தனித்தனியாக இரண்டாக பிரிக்காமல் உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் சிஐஎஸ்எப் போலீஸார் அல்லது மாநில போலீஸாரை நியமிக்க வேண்டும் எனக்கோரி வழக்கறிஞர் ஆர்.ஒய். ஜார்ஜ் வில்லியம்ஸூம், வழக்கறிஞர் யானைராஜேந்திரனும் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஜெ. சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இதுதொடர்பாக உயர் நீதிமன்ற பாதுகாப்பு கமிட்டி இன்று (நேற்று) மாலை கூடி இதுதொடர்பாக விவாதிக்கவுள்ளது. மாநிலம்முழுவதும் உள்ள அனைத்துகீழமை நீதிமன்றங்களுக்கும் சிஐஎஸ்எப் போலீஸாரின் பாதுகாப்பு வழங்குவது என்பது சாத்தியமற்றது. அதேநேரம் முக்கியமான வழக்குகளை விசாரிக்கும் மாவட்ட முதன்மை நீதிமன்றங்கள் உள்ளிட்ட கீழமை நீதிமன்றங்களில் பாதுகாப்பை பலப்படுத்தவும், நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகளின் குடியிருப்புகளில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி போதிய பாதுகாப்பை உறுதி செய்யவும் ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கீழமை நீதிமன்றங்களில் கண்காணிப்பை உறுதி செய்ய வேண்டும் எனக்கூறி விசாரணையை ஜூலை 18-க்கு தள்ளி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x