Published : 17 Apr 2024 04:44 AM
Last Updated : 17 Apr 2024 04:44 AM

விவிபாட் இயந்திரத்தின் அனைத்து ஒப்புகை சீட்டுகளையும் எண்ணுவது சாத்தியமற்றது: உச்ச நீதிமன்றம் கருத்து

கோப்புப்படம்

புதுடெல்லி: காகித வாக்குச்சீட்டு முறையில் பல குறைபாடுகள் உள்ளன. அனைத்து விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணுவது சாத்தியமற்றது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

‘மீண்டும் காகித வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் அல்லது மின்னணு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்யும்போது வாக்காளருக்கு விவிபாட் இயந்திரம் மூலம் ஒப்புகைச்சீட்டு வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும்’ என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா அமர்வில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்ததாவது:

பிரசாந்த் பூஷன்: பல ஐரோப்பிய நாடுகள் மின்னணு இயந்திர வாக்குப்பதிவு முறையில் இருந்து மீண்டும் காகித வாக்குச்சீட்டு முறைக்கே மாறிவிட்டன. ஜெர்மனியில் காகித வாக்குச்சீட்டு முறைதான் பின்பற்றப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. அதனால், இந்தியாவும் மீண்டும் காகித வாக்குச்சீட்டு முறைக்கு திரும்பலாம்.

இல்லாவிட்டால், விவிபாட் இயந்திரம் வழங்கும் ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளருக்கு வழங்கி அதை ஒரு வாக்குப் பெட்டியில் போடச் செய்யலாம். இந்த விவிபாட் சீட்டுகள் அனைத்தும் எண்ணப்பட வேண்டும். தற்போது, ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 5 விவிபாட் இயந்திரங்கள் மட்டுமே எண்ணப்படுகின்றன.

இது வெறும் 5 சதவீதம்தான். யாருக்கு வாக்களித்தோம் என்ற விவரம், தற்போதுள்ள விவிபாட் இயந்திரங்களில் 7 வினாடிகள் மட்டுமே ஒளிர்கிறது. இது முறைகேட்டுக்கு வழிவகுக்கலாம்.

கோபால் சங்கரநாராயணன்: நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பது வாக்காளர்களுக்கு உறுதிபட தெரிய வேண்டும். வாக்காளர்களுக்கு அந்த நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அதுதான் முக்கியம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, நீதிபதிகள் கூறியபோது, ‘‘எங்களுக்கு 60 வயது ஆகிறது. காகித வாக்குச்சீட்டு முறை அமலில் இருந்தபோது என்ன நடந்தது என்பதை நீங்கள் மறந்திருக்கலாம். நாங்கள் மறக்கவில்லை. ஜெர்மனி மக்கள்தொகை சுமார் 6 கோடிதான் இருக்கும். நம் நாட்டில் 97 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

அனைத்து விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்றால், மனித தவறுகள், பாரபட்சம் நடக்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு எண்ணுவது சாத்தியமற்றது. மனித தலையீடு இல்லாத இயந்திரம் சரியான முடிவுகளை கொடுக்கும்’’ என்றனர். இந்த வழக்கு விசாரணை நாளை தொடர்ந்து நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x