Published : 11 Apr 2024 02:58 PM
Last Updated : 11 Apr 2024 02:58 PM

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவை கைது செய்தது சிபிஐ

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா மேலவை உறுப்பினர் கவிதாவை சிபிஐ கைது செய்துள்ளது.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கவிதா ஏற்கெனவே அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்த டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. இதையடுத்து, கடந்த 5-ம் தேதி நீதிமன்றம் சிபிஐக்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து, கவிதாவிடம் விசாரணை நடத்திய சிபிஐ, தற்போது அவரை கைது செய்துள்ளது.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதாவை அமலாக்கத் துறை மார்ச் 15-ம் தேதி கைது செய்தது. அவரை முதலில் 7 நாட்களும் பிறகு மேலும் 3 நாட்களும் அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அமலாக்கத் துறை காவல் முடிந்து மார்ச் 26-ம் தேதி கவிதா டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை ஏப்ரல் 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கவிதா டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

கவிதாவின் நீதிமன்ற காவல் இன்று (ஏப்.9) நிறைவடைந்த நிலையில், அமலாக்கத் துறை அவரை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் காலையில் ஆஜர்படுத்தியது. அப்போது கவிதாவின் காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்க அமலாக்கத் துறை கோரியது. இதனை ஏற்ற நீதிமன்றம் காவலை ஏப்ரல் 23-ம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டது.

இடைக்கால ஜாமீன் கோரி கவிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி காவேரி பவேஜா, கோரிக்கையை நிராகரித்தார். இதையடுத்து, வழக்கமான ஜாமீன் கோரி கவிதா மனு தாக்கல் செய்தார். இந்த மனு வரும் 16-ம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது.

இதனிடையே, கவிதா நீதிமன்றத்துக்கு எழுதிய கடிதத்தை அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாசித்தார். கவிதா அந்தக் கடிதத்தில், “நான் இந்த வழக்கினால் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறேன். என்னுடைய தனிப்பட்ட மற்றும் அரசியல் நற்பெயர் குறிவைக்கப்பட்டுள்ளது. எனது மொபைல் போன் அனைத்துத் தொலைக்காட்சி சேனல்களிலும் காட்டப்படுகிறது. இது எனது தனியுரிமையை நேரடியாக மீறும் செயல்.

நான் புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கிறேன். எனது அனைத்து வங்கிக் கணக்கு விவரங்களையும் அளித்துள்ளேன். நான் அழித்ததாக அமலாக்கத் துறை கூறும் அனைத்து மொபைல் போன்களையும் ஒப்படைத்து விடுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x