Published : 11 Apr 2024 10:04 AM
Last Updated : 11 Apr 2024 10:04 AM

2024 தேர்தல் களத்தில் வேலையின்மை, விலைவாசியே முக்கியப் பிரச்சினைகள்: ஆய்வில் தகவல்

புதுடெல்லி: 2024 மக்களவைத் தேர்தல் களத்தின் முக்கியப் பிரச்சினைகளாக வேலைவாய்ப்பின்மையும், பணவீக்கமும் இருப்பதாக சிஎஸ்டிஎஸ் - லோக்நிதி (CSDS-Lokniti ) என்ற அமைப்பு மேற்கொண்ட தேர்தலுக்கு முந்தைய (ப்ரீ போல் சர்வே) ஆய்வு தெரிவிக்கின்றது.

இதற்காக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 62 சதவீதம் பேர் வேலை கிடைப்பது சிரமமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களில் 62 சதவீதம் பேரும் நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்களில் 59 சதவீதம் பேரும் வேலை கிடைப்பதில் சிரமம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆண் - பெண் விகிதத்தின் அடிப்படையில் பார்த்தால் 65 சதவீத ஆண்களும் 59 சதவீத பெண்களும் வேலை கிடைப்பது சிரமமாக இருப்பதாகக் கூறியுள்ளனர். வெறும் 12 சதவீதம் பேர் மட்டும் வேலை கிடைப்பது எளிதாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதில் குறிப்பாக முஸ்லிம்கள் வேலைவாய்ப்பு சிரமம் இருப்பதாக 67 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இந்துக்கள், ஓபிசிக்கள், பட்டியலினத்தவர்களில் 63 சதவீதம் பேர் வேலை கிடைப்பது சிரமமாக இருப்பதாகக் கூறியுள்ளனர். 59 சதவீத பழங்குடிகளும் வேலைவாய்ப்பின்மை பற்றி கவலை தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில் இந்து உயர்சாதியினர் தரப்பில் 17 சதவீதம் பேர் வேலை வாய்ப்பு கிடைப்பது எளிதாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களில் 57 சதவீதம் பேர் வேலை கிடைப்பது சிரமம் எனத் தெரிவித்துள்ளனர்.

17 சதவீதம் பேர் மாநில அரசுகளே வேலை வாய்ப்பின்மைக்குக் காரணம் என்றும் 27 சதவீதம் பேர் மத்திய அரசே அதற்குக் காரணம் என்றும், 57 சதவீதம் பேர் இரு தரப்புமே காரணம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

விலைவாசி உயர்வும் புள்ளிவிவரமும்: விலைவாசி உயர்வு பொருத்தவரை 71 சதவீதம் பேர் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஏழை மக்களில் 76 சதவீதம் பேர் விலைவாசி மிகவும் அதிகரித்துவிட்டதாகவும், முஸ்லிம்களில் 75 சதவீதம் பேர் விலைவாசி உயர்வு தாக்கம் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

விலைவாசி உயர்வுக்கு மாநில அரசுகளே காரணம் என 12 சதவீதம் பேரும், மத்திய அரசே காரணம் என 26 சதவீதம் பேரும், இரு தரப்பும் என 56 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கைத் தரம்: வாழ்க்கைத் தரத்தைப் பொருத்தவரை 48 சதவீதம் பேர் தங்களது வாழ்க்கைத்தரம் ஓரளவு மேம்பட்டுள்ளது என்றும் 14 சதவீதம் பேர் அதேபோல் இருப்பதாகவும், 35 சதவீதம் கடந்த ஐந்தாண்டுகளில் தங்களின் வாழ்க்கைத் தரம் சரிந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.

22 சதவீதம் பேர் மட்டும் தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துவிட்டு பணத்தை சேமிக்க முடிகிறது எனத் தெரிவித்துள்ளனர். 36 சதவீதம் குடும்பத் தேவைகளையே பூர்த்தி செய்ய இயலவில்லை எனத் தெரிவித்துள்ளனர். கஷ்டப்பட்டு தேவைகளைப் பூர்த்தி செய்வதாக 23 சதவீதம் பேரும் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய இயலவில்லை என 12 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னரும்கூட லோக்நிதி இதேபோல் தேர்தலுக்கு முந்தைய ஆய்வு (ப்ரீ போல் சர்வே) நடத்தியது. அப்போது இருந்ததைவிட இப்போதைய ஆய்வில் 55 சதவீதம் பேர் ஊழல் அதிகரித்துள்ளது என்றும் 19 சதவீதம் பேர் ஊழல் குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

25 சதவீதம் பேர் மத்திய அரசால் ஊழல் அதிகரித்துள்ளது என்றும், 16 சதவீதம் பேர் மாநில அரசுகளால் ஊழல் அதிகரித்துள்ளது என்றும் 56 சதவீதம் பேர் இருதரப்புமே எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த இரு புள்ளிவிவரங்களும் வாக்காளர்கள் பொருளாதார நிலை மீது கவலை கொண்டுள்ளனர் என்பதையே உணர்த்துகிறது என்று சிஎஸ்டிஎஸ் - லோக்நிதி (CSDS-Lokniti ) அமைப்பு தனது கணிப்பை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும். இதன்படி ஏப்ரல் 19, 26, மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏப்ரல் 19-ம் தேதி நடக்கும் முதல்கட்ட வாக்குப்பதிவின்போது தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x