Published : 10 Apr 2024 12:59 PM
Last Updated : 10 Apr 2024 12:59 PM

மதுபான கொள்கை ஊழல் வழக்கு: உச்ச நீதிமன்றத்தை நாடிய கேஜ்ரிவால்

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்தது செல்லும். இந்த நடவடிக்கை சட்டபூர்வமானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது ஆம் ஆத்மி கட்சி.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்தது. தற்போது அவர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைது நடவடிக்கையை எதிர்த்து அவரது தரப்பில் கடந்த மார்ச் 23-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கடந்த 2-ம் தேதி எழுத்துபூர்வமாக விரிவான விளக்கம் அளித்தது. 3-ம் தேதி வழக்கு விசாரணை நடந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை, நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா நேற்று வழங்கினார். அதில், "ஹவாலா புரோக்கர்கள், கோவா தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர்கள், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சரத் ரெட்டி, ராகவ் முங்தா ஆகியோரது வாக்குமூலங்களை அமலாக்கத் துறை சமர்ப்பித்துள்ளது.

மதுபான கொள்கை வழக்கு என்பது சட்டவிரோதமான வழக்கு அல்ல. இந்த வழக்கில் சட்டப்பூர்வ நடைமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளன. எனவே, கேஜ்ரிவாலை கைது செய்தது செல்லும். தேர்தல் நேரத்தில் கைது செய்ததாக வாதிடுவதை ஏற்க முடியாது. அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளன. எனவே, கேஜ்ரிவால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

காணொலி மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்ற அவரது கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. அமலாக்கத் துறை எவ்வாறு விசாரணை நடத்த வேண்டும் என்பதை, குற்றம் சாட்டப்பட்டவர் தீர்மானிக்க முடியாது. முதல்வர் என்பதற்காக சிறப்பு சலுகை வழங்க முடியாது.” என்று கூறி கேஜ்ரிவாலின் மனுவை நிராகரித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கேஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் தலைமை வழக்கறிஞர் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு முன் வழக்கு தாக்கல் செய்தார். மேலும், அவசர வழக்காக இதனை விசாரிக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர். ஆனால், தலைமை நீதிபதி அமர்வோ, இன்றைக்கே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டது. எனினும், ”நாங்கள் பார்க்கிறோம்” என்று மட்டும் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x