Last Updated : 10 Apr, 2024 10:50 AM

 

Published : 10 Apr 2024 10:50 AM
Last Updated : 10 Apr 2024 10:50 AM

இடுப்பில் துப்பாக்கியுடன் சித்தராமையாவுக்கு மாலையிட்ட நபர்: பிரச்சாரத்தில் பரபரப்பு

புகைப்படம்: வீடியோ ஸ்க்ரீன்ஷாட்

பெங்களூரு: பெங்களூருவில் கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரச்சாரம் மேற்கொண்ட போது இடுப்பில் துப்பாக்கி வைத்திருந்த நபர், அத்துமீறி அவருக்கு மாலையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று முன் தினம் பெங்களூரு தெற்கு தொகுதியில் திறந்த வாகனத்தில் நின்றவாறு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவருடன் காங்கிரஸ் வேட்பாளர் சவும்யா ரெட்டி, அவரது தந்தையும் அமைச்சருமான ராமலிங்க ரெட்டி உடன் இருந்தனர்.

இந்நிலையில் 40 வயது மதிக்கத்தக்க நபர் முதல்வர் சித்தராமையா பயணித்த வாகனத்தின் மீது, பாதுகாவலர்கள் கட்டுப்பாட்டை மீறி திடீரென ஏறினார். சித்தாரமையாவை வாழ்த்தி கோஷமிட்டவாறு அவருக்கு மாலை அணிவித்தார். அதேபோல சவும்யா ரெட்டி, ராமலிங்க ரெட்டி ஆகியோருக்கும் மாலை அணிவித்தார். அப்போது அவர் இடுப்பில் இருந்த துப்பாக்கியை கவனித்த சித்தராமையா, ராமலிங்க ரெட்டி ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை கீழே இறங்குமாறு சத்தம் போட்டனர்.

இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்துமாறு முதல்வர் அலுவலகம் போலீஸாருக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் துப்பாக்கியுடன் முதல்வர் சித்தராமையாவுக்கு மாலையிட்ட நபரின் பெயர் ரியாஸ் என தெரியவந்துள்ளது. காங்கிரசின் ஆதரவாளரான இவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை முயற்சி தாக்குதல் நடந்துள்ளது. அதில் தப்பிய ரியாஸ் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளது.

பாஜக விமர்சனம்: இந்நிலையில் பெங்களூரு தெற்கு தொகுதியின் பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா, “துப்பாக்கி வைத்துள்ள நபரை முதல்வருக்கு அருகில் எப்படி அனுமதித்தார்கள்? காங்கிரஸாருக்கு மாலை அணிவிப்பவர்கள், பேனர் வைப்பவர்கள் எல்லாம் ரவுடிகளாகவும், கொலை பின்னணி கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். கர்நாடகாவின் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாகும். இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

துப்பாக்கி வைத்திருக்க உரிமம் பெற்றவர்கள் தேர்தல் காலங்களில் அதை உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். ஆனால், இவருக்கு மட்டும் ஆயுதத்தை காவல் நிலையத்தில் ஒப்படைக்காமல் இருக்கு யார் விதிவிலக்கு அளித்தது?” என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில், “துப்பாக்கியுடன் முதல்வருக்கு அருகில் சென்றது தவறு. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x