Last Updated : 21 Apr, 2018 03:07 PM

 

Published : 21 Apr 2018 03:07 PM
Last Updated : 21 Apr 2018 03:07 PM

பாஜகவில் இருந்து விலகினார் யஷ்வந்த் சின்ஹா: ‘ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது’ என அச்சம்

 

அரசியல் கட்சிகளுடனான அனைத்துத் தொடர்புகளில் இருந்தும் நான் இன்று முதல் விலக்கிக் கொள்கிறேன். எந்த கட்சியிலும் இனி நான் சேரப்போவதில்லை. பாஜகவுடனான அனைத்துத் தொடர்புகளும் இன்று முடிந்துவிட்டு, விலகிவிட்டேன் என்று மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா அறிவித்தார்.

பிஹார் தலைநகர் பாட்னாவில் பாஜக அல்லாத கட்சிகள் சேர்ந்து நடத்திய ராஷ்ட்ரி மன்ச் எனும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ராஷ்ட்ரிய ஜனதாதளம், சமாஜ்வாதி, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று யஷ்வந்த் சின்ஹா பேசியதாவது:

அனைத்துக் கட்சி அரசியலில் இருந்தும் நான் இன்றுடன் விடைபெற்று அரசியலில் துறவறம் செல்கிறேன். இனிமேல் எந்தவிதமான அரசியல் கட்சிகளிலும் நான் சேரப்போவதில்லை. பாஜகவிலுந்தும் இன்று முதல் நான் விலகிவிட்டேன்.

இப்போது பிரதமராக இருக்கும் மோடியின் ஆட்சியில் ஜனநாயகம் மிகப்பெரிய அச்சுறுத்தலில் இருக்கிறது. இதற்கு முன் இருந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் எவ்வளவு செலவானாலும் நாடாளுமன்றம் செயல்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால், தற்போது இருக்கும் பிரதமர் மோடி நாடாளுமன்றம் செயல்படாமவிட்டால் மகிழ்ச்சி அடைகிறார். நாடாளுமன்றம் முடங்கினால், எதிர்க்கட்சிகளுடன் பேசி அதற்கான தீர்வை தேட மறுக்கிறார்.

ஒரு வகையில் நாடாளுமன்றம் செயல்படாமல் இருப்பது தற்போது இருக்கும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு மகிழ்ச்சியைத் தரும். ஏனென்றால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுவிட்டுவிட்டது. இவ்வாறு யஷ்வந்த் சின்ஹா பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தினேஷ் திரிவேதி, ராஷ்ட்டிரிய ஜனதா தளம் கட்சியி மூத்த தலைவர் ஜெயந்த் சவுத்ரி, லூலுவின் மகன் தேஜஸ்வி யாதவ், ஆம்ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், உதய் நாராயன் சவுத்ரி, காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

எந்தக் கட்சியிலும் இனி சேரப்போவதில்லை எனத் தெரிவித்துள்ள யஷ்வந்த் சின்ஹா மோடிக்கும், பாஜகவுக்கும் எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து ஐக்கிய முன்னணியை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x