Published : 04 Apr 2024 09:47 AM
Last Updated : 04 Apr 2024 09:47 AM

“இது கொண்டாட்டத்துக்கான நேரம் இல்லை; போருக்கான தருணம்” - ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் 

இது கொண்டாட்டத்துக்கான நேரம் இல்லை. போருக்கான தருணம் என்று சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

திகார் சிறையில் இருந்து வெளிவந்த சஞ்சய் சிங் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், “இது கொண்டாட்டத்துக்கான நேரம் இல்லை. இது போருக்கான தருணம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். நமது தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் சிறையில் உள்ளார். மனீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோரும் சிறையில் உள்ளனர். நம் முன்னால் ஒரு நீண்ட போராட்டம் காத்திருக்கிறது.

நாம் டெல்லி மக்களைச் சந்திக்க வேண்டும். ஆம் ஆத்மி வேட்பாளர்களும், இண்டியா கூட்டணி வேட்பாளர்களும் போட்டியிடும் இடங்களுக்கு எல்லாம் நாம் செல்ல வேண்டும். இந்த சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர நாம் கடுமையாக உழைக்க வேண்டும். இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும். நாம் போராடத் தயார் ஆவோம். சிறைக் கம்பிகள் உடைக்கப்படும். நம் தலைவர்கள் வெளியே வருவார்கள். என்று முழங்கினார். பின்னர் அவர் டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவாலை சந்தித்தார்.

அவர்களுக்கு நம் தலைவர்கள் ஒவ்வொருவராகக் கைது செய்ய வேண்டும். ஆதிஷி, ராகவ் சட்டா, கைலாஷ் ஆகியோரையும் கைது செய்ய விரும்புகின்றனர். நம் அமைச்சர் கைலாஷ் கெலாட்டை 4 மை நேரத்துக்கும் மேல் விசாரித்துள்ளனர். இவையெல்லாம் பாஜகவின் சர்வாதிகாரத்துக்கான அடையாளம் இன்றி வேறென்ன.

ஊழல் நடந்ததாக குற்றஞ்சாட்டி பணத்தைக் கண்டுபிடிக்கிறேன் எனக் கூறுகிறார்கள். எங்கள் கட்சி கலகத்தில் பிறந்த கட்சி. நாங்கள் ஒருபோது ஓயமாட்டோம். எங்கள் முதல்வர் ராஜினாமா செய்ய மாட்டார். சிறையில் இருந்து எப்படி ஆட்சி செய்யலாம் எனக் கேட்பார்கள். நான் சிறையில் இருந்தபோது சட்ட புத்தகங்கள் வாசித்தேன். அதிகாரபூர்வ கடிதங்களை சிறையில் இருந்து அனுப்புவதை யாராலும் தடுக்க முடியாது” என்றார்.

டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இது தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாகவும் இதன் வாயிலாக பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய இரு புலனாய்வு அமைப்புகளும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யான சஞ்சய் சிங் கடந்த ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு நேற்று (புதன்கிழமை) உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இதன் மூலம் மதுபானக் கொள்கை வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள முதல் ஆம் ஆத்மி தலைவராகியுள்ளார் சஞ்சய்சிங். மக்களவைத் தேர்தல் நேரத்தில் ஆம் ஆத்மியின் முக்கியத் தலைவர்கள் சிறையில் உள்ள நிலையில் சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் கிடைத்துள்ளது அக்கட்சிக்கு ஆறுதலாக பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x