Published : 03 Apr 2024 10:57 AM
Last Updated : 03 Apr 2024 10:57 AM

‘தேர்தல் முடியும் வரை வீட்டுக்கு வர வேண்டாம்’ - காங். எம்எல்ஏவுக்கு கணவர் உத்தரவு

மத்திய பிரதேசத்தில் பிஎஸ்பி சார்பில் போட்டியிடும் நபர் தேர்தல் வரை வீட்டுக்கு வர வேண்டாம் என்று தனது மனைவியான காங்கிரஸ் எம்எல்ஏ-வுக்கு உத்தரவிட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் பாலாகாட் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக அனுபா முஞ்சாரே உள்ளார்.

இவரது கணவர் கன்கர் முஞ்சாரே பாலாகாட் மக்களவைத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) சார்பில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் முடியும் வரை வீட்டுக்கு வர வேண்டாம் என கன்கர் முஞ்சாரே தனது காங்கிரஸ் எம்எல்ஏ மனைவிக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அனுபா முஞ்சாரே கூறும்போது, “எங்களுக்கு திருமணமாகி 33 ஆண்டுகள் ஆகிறது. நானும் என் கணவரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒரு மகனுடன் மகிழ்ச்சியாக ஒரே வீட்டில் வசித்து வருகிறோம். இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் என் கணவர் தேர்தல் வரை என்னை வீட்டுக்கு வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நான் பாலாகாட் தொகுதியில் காங்கிரஸ் சார்பிலும் என் கணவர் கோண்ட்வானா பிஎஸ்பி சார்பிலும் போட்டியிட்டோம். அப்போதுகூட நாங்கள் ஒன்றாகவே வசித்து வந்தோம். இப்போது ஏன் இப்படி சொன்னார் என தெரியவில்லை.

அதேநேரம் பாலாகாட் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சாம்ராட் சரஸ்வத்துக்கு நான் முழு ஆதரவு அளிப்பேன். ஆனால் என் கணவருக்கு எதிராக பேசமாட்டேன். பாஜக வேட்பாளரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து கன்கர் முஞ்சாரே கூறும்போது, “தேர்தல் நடைபெறும் நேரத்தில் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த இருவருவம் ஒரே வீட்டில் தங்கியிருந்தால் ‘மேட்ச் பிக்ஸிங்’ நடப்பதாக வாக்காளர்கள் நினைப்பார்கள். எனவேதான் என் மனைவியை தேர்தல் முடியும் வரை வெளியில் தங்கி இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x