Published : 28 Aug 2014 12:03 PM
Last Updated : 28 Aug 2014 12:03 PM
ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை தடுக்க முடியாது என முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் தொடர்ந்த மனுவை விசாரித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று காலை, ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாக, தன் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை தடுக்கக் கோரி, முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
நீதிபதி எச்.எல்.தத் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு முன் இந்த மனு இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவதை தடுக்க முடியாது என தெரிவித்துவிட்டனர்.
தயாநிதி மாறன் மனு விபரம்:
இந்த வழக்கில் சிபிஐ இன்னும் விசாரணையை முழுமையாக முடிக்கவில்லை. விசாரணை நிறைவு பெறாத நிலையில், தன் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சட்டத்தில் இடமில்லை என தயாநிதி மாறன் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு பின்னணி:
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டி மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத் தலைவர் அனந்த கிருஷ்ணன் அந் நிறுவனத்தை வாங்க உதவியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து 2011-ல் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. ஆனால் இதுவரை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
புதிய மனு:
இதற்கிடையில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கை தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில்: "மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான சன் டைரக்ட் நிறுவன பங்குகளில் ரூ.650 கோடியை மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்திருப்பதை சிபிஐ கண்டுபிடித்துள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று சிபிஐ-யின் அனைத்து விசாரணை அதிகாரிகளும் நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் சிபிஐ இயக்குநர் அதனை ஏற்க மறுத்து குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யவிடாமல் தடுத்து வருகிறார் என குற்றம் சாட்டியிருந்தார். இந்த மனு செப்.2-ல் விசாரணைக்கு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT