Published : 01 Apr 2024 04:51 AM
Last Updated : 01 Apr 2024 04:51 AM

கொள்ளையரிடம் இருந்து உயிருடன் மீட்ட கடற்படைக்கு நன்றி - ‘இந்தியா ஜிந்தாபாத்’ கோஷமிட்ட பாகிஸ்தான் மீனவர்கள்

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி: கடற்கொள்ளையர்களிடம் இருந்து உயிருடன் மீட்டவுடன், உணர்ச்சிப் பெருக்கில் இந்திய கடற்படைக்கு நன்றி தெரிவித்து பாகிஸ்தான் மீனவர்கள் ‘‘இந்தியா ஜிந்தாபாத்’’ என்று கோஷமிட்டனர்.

அரபிக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரானிய மீன்பிடி படகில் 23 பாகிஸ்தானியர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது வழிமறித்த கடற்கொள்ளையர்கள், ஆயுதங்களைக் காட்டி கப்பலை கடத்தினர். தகவலறிந்தவுடன் இந்திய கடற்படை போர்க் கப்பல் ஐஎன்எஸ் சுமேதா, ஐஎன்எஸ் திரிசூல் ஆகியவை கடற்கொள்ளையர்களை துரத்த ஆரம்பித்தன.

12 மணி நேர முயற்சிக்கு பிறகு, கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்ற கப்பலை ஐஎன்எஸ் சுமேதா கடந்த 29-ம் தேதி சுற்றிவளைத்தது. பிறகு, இந்திய கடற்படையிடம் சரணடைந்த 9 கடற்கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். கப்பலில் இருந்த 23 பாகிஸ்தானியர்களையும் கடற்படையினர் மீட்டனர். ஈரானியபடகும் மீட்கப்பட்டது.

கடற்கொள்ளையர்களிடம் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டதும், பாகிஸ்தான் மீனவர்கள் உணர்ச்சிப் பெருக்கில் ‘‘இந்தியா ஜிந்தாபாத்’’ என்று கோஷமிட்டு இந்திய கடற்படைக்கு நன்றி தெரிவித்தனர். இது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது என்று கடற்படை அதிகாரிகள் கூறினர்.

இதுகுறித்து இந்திய கடற்படைகூறும்போது, ‘ஈரானிய மீன்பிடி கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திய தகவல் கிடைத்ததும் ஐஎன்எஸ் சுமேதா, ஐஎன்எஸ் திரிசூல் ஆகிய 2 கப்பல்களும் கடற்கொள்ளையர்களை பிடிக்கும்பணியில் இறங்கின. கடற்படை அதிகாரிகள் சரியான திட்டங்கள்வகுத்து, கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரானிய படகைமீட்டனர். அதில் இருந்த 23 பாகிஸ்தானியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 9 சோமாலிய கடற்கொள்ளையர் கைது செய்யப்பட்டனர்’ என தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x