Published : 30 Mar 2024 06:27 AM
Last Updated : 30 Mar 2024 06:27 AM

அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50% இடங்கள்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி

கோப்புப்படம்

புதுடெல்லி: வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அனைத்து புதிய அரசுப் பணிகளிலும் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். வயநாடு காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் நேற்று கூறியதாவது:

இன்றும் மூன்றில் ஒரு பெண் மட்டுமே வேலை செய்கிறார்? 10 அரசு வேலைகளில் ஒரு பெண் மட்டுமே இருப்பது ஏன்? இந்திய மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கை 50 சதவீதம் இல்லையா? மேல்நிலை மற்றும் உயர்கல்வியில் பெண்களின் பங்கு 50 சதவீதம் இல்லையா? அவர்களின் பங்கு ஏன் குறைவாக உள்ளது?

மக்கள் தொகையில் பாதியாக இருப்பவர்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது. பெண்களுக்கு சமமான பங்களிப்பு இருந்தால் மட்டுமே பெண்களின் திறன் முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் அனைத்து புதிய அரசுப் பணிகளிலும் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

மக்களவை மற்றும் சட்டப் பேரவையில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். பாதுகாப்பான வருமானம், பாதுகாப்பான எதிர்காலம், ஸ்திரத்தன்மை மற்றும் சுயமரியாதை உள்ள பெண்கள் உண்மையிலேயே சமூகத்தின் சக்தியாக மாறுவார்கள்.

50 சதவீத அரசுப் பதவிகள் பெண்களைக் கொண்டிருப்பது நாட்டின் ஒவ்வொரு பெண்ணுக்கும் பலத்தைத் தரும். பெண்கள் இந்தியாவின் தலைவிதியை மாற்றுவார்கள். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x