Published : 19 Feb 2018 11:45 AM
Last Updated : 19 Feb 2018 11:45 AM
கர்நாடக மாநிலம், மைசூரு நகருக்கு வரும் பிரதமர் மோடி தங்குவதற்கு அறைகள் ஏதும் இல்லை என்று புகழ்பெற்ற லலித் மஹால் பேலஸ் ஹோட்டஸ் கூறிவிட்டது.
இதையடுத்து, வேறு சொகுசு ஹோட்டலை பிரதமர் அலுவலக அதிகாரிகள் நாடினர்.
மைசூரு அருகே இருக்கும் சரவணபெலகோலா கோயிலில் நடக்கும் மஹாமஸ்டாபிஷேகத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார். இதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு மைசூரு நகருக்கு வந்தார். மேலும், பெங்களூரு-மைசூரு இரட்டை ரயில் பாதை திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி மைசூரு வந்தால் தங்குவதற்காக மைசூரு நகரில் உள்ள புகழ்பெற்ற லலித் மஹால் பேலஸ் ஹோட்டலில் அறை ஏற்பாடு செய்யப்படும்.
ஆனால், இந்த முறை பிரதமர் மோடி வருவதற்கு முன், பிரதமர் அலுவலகம் சார்பில் லலித் மஹால் பேலஸில் அறைகள் கேட்கப்பட்டன. ஆனால், திருமண சீசன் என்பதால், அறைகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன என்று ஹோட்டல் நிர்வாகம் கூறிவிட்டது.
மேலும், 3 சாதாரண அறைகள் மட்டும் இருப்பதால், அதை எடுத்துக்கொள்ள ஹோட்டல் நிர்வாகம் பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது. ஆனால், பாதுகாப்பு காரணங்களால் குறைந்த அளவிலான அறைகள் போதாது என்று பிரதமர் அலுவலகம் கூறிவிட்டது.
இது குறித்து லலித் மஹால் பேலஸ் ஹோட்டலின் பொது மேலாளர் ஜோசப் மத்தியாஸ் கூறுகையில், “ திருமணத்துக்காக முன்கூட்டியே ஹோட்டலில் உள்ள பெரும்பாலான அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. 3 அறைகள் மட்டுமே இருந்தது அதை பிரதமர் மோடிக்கு தருகிறோம் என்றோம். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக அதிகமான அறைகள் தேவைப்படுவதால், வேண்டாம் எனத் பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, பிரதமர் மோடிக்காக, அவரின் தனிப்பட்ட அலுவலக அதிகாரிகள் ஹோட்டல் ரேடிஸன் புளூவில் அறை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT