கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: கேஜ்ரிவால் வாபஸ்

அரவிந்த் கேஜ்ரிவால் | கோப்புப்படம்
அரவிந்த் கேஜ்ரிவால் | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவினை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வாபஸ் பெற்றுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்தவர்கள், “வழிமுறைகளின் படி கேஜ்ரிவால் விசாரணை நீதிமன்றத்தினை அணுக உள்ளார். அதேபோல், அமலாக்கத் துறையின் வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் ஆஜர்படுத்தப்படுவார்” என்று தெரிவித்தனர்.

டெல்லி மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட பிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த கவிதாவின் ஜாமீன் மனுவினை உச்ச நீதிமன்றம் நிகராரித்த சில மணி நேரத்துக்கு பின்னர் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரின் இந்த முடிவு நிகழந்துள்ளது. இதனிடையே, கவிதாவின் மனுவினை விசாரணை செய்த அதே உச்ச நீதிமன்ற அமர்வில் தான் கேஜ்ரிவாலின் மனுவும் விசாரணைக்கு வர இருந்தது.

கவிதாவின் மனுவினை விசாரித்த நீதிபதிகள், ஜாமின் பெற விசாரணை நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தினர். அதுதான் வழக்கமான நடைமுறை என்றும் அதை உச்ச நீதிமன்றம் மீற முடியாது என்றும் தெரிவித்தனர்.

முன்னதாக, மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் முன்பு ஆஜராகி, பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் வழக்கை சிறப்பு அமர்வு விசாரிக்கும் போது இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம்.எம். சுந்தரேஷ் மற்றும் பீலா எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவினை விசாரிக்க ஒப்புக்கொண்டது. நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான வழக்கமான அமர்வு முன்பு அபிஷேக் சிங்வி தனது மனுவினைத் தாக்கல் செய்தார். அப்போது அரவிந்த் கேஜ்ரிவாலின் மனுவினை விசாரிக்க சிறப்பு அமர்வு வெள்ளிக்கிழமை உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அமலாக்கத் துறை சம்மன்களை எதிர்த்து கேஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கைது நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை இரவு அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்தது.

பணமோசடி வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை முதல்வர் கேஜ்ரிவாலுக்கு 9 முறை சம்மன் அனுப்பப்பட்டன. அவைகள் சட்டவிரோதமானவை எனக் கூறி தவிர்த்து வந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in