Published : 02 Feb 2018 12:52 PM
Last Updated : 02 Feb 2018 12:52 PM
ஹைதராபாத்தில் தனியார் பள்ளியில் பயின்று வந்த 9ம் வகுப்பு மாணவி ஒருவர், 2,000 ரூபாய் கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவமானடைந்த அந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மல்கஞ்கிரி பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி ஒருவர் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை செய்து கொள்ளும் முன் அவர் எழுதிவைத்த கடிதம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. அதில் "பள்ளியில் கட்டணம் செலுத்தாததால் என்னை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. என்னை மன்னித்து விடுங்கள் அம்மா’’ என எழுதப்பட்டுள்ளது.
அந்த மாணவியின் பெற்றோர் 2,000 ரூபாய் கல்வி கட்டணத்தை செலுத்தாததால் அவரை தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. மேலும் வகுப்பில் இருந்து வெளியே செல்லுமாறு கூறியதால், சக தோழிகள் முன் அந்த மாணவி அவமரியாதையை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பிய மாணவி, தனது தங்கையிடம் பள்ளியில் தனக்கு நேர்ந்த அவமானத்தை சொல்லி அழுதுள்ளார். இந்த நிலையில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாணவியின் பெற்றோர் இருவரும் வேலை செய்து வருகின்றனர்.
அவர்கள் வீடு திரும்பிய பிறகே, தங்கள் மகள் தற்கொலை செய்த விவரம் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT