Published : 20 Mar 2024 06:22 AM
Last Updated : 20 Mar 2024 06:22 AM

உ.பி.யில் நடந்த திருமணத்தில் மணமகன் வராததால் அரசு நிதி பெற அண்ணனை மணந்த பெண்

லக்னோ: உத்தரபிரதேச மாநில அரசு சார்பில் நடைபெற்ற திருமணத்தின்போது மணமகன் வராததால் அரசு நிதியுதவியைப் பெறுவதற்காக தனது அண்ணனையே ஒரு பெண் திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வழக்கில் அந்த கிராம நிர்வாக அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

உ.பி. மாநில அரசின் சமூக நலத்துறை சார்பில் அவ்வப்போது ஏழை மணமக்களுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் திருமணம் செய்யும் மணமக்களுக்கு ரூ.51 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள், ரொக்கம் வழங்கப்படும்.

இந்நிலையில், கடந்த 5-ம் தேதி மகராஜ்கஞ்ச் பகுதிக்கு அருகிலுள்ள லகிம்பூரில் உ.பி. அரசு சார்பில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோருக்கு திருமணம் நடைபெற்றது. இதில் பிரீத்தி யாதவ் என்ற பெண், ரமேஷ் யாதவ் என்பவரைத் திருமணம் செய்ய இருந்தார். ஆனால் குறித்த நேரத்தில் மணகன் ரமேஷ் யாதவ் வரவில்லை.

இந்நிலையில் அரசு நிதியுதவி தவற விடக்கூடாது என்பதற்காக அப்போது, பிரீத்தி யாதவின் அண்ணன் கிருஷ்ணாவை திருமணம் செய்வது போல் நடிக்குமாறு அங்குள்ள தரகர்கள் கூறினர். இதையேற்றுக் கொண்ட பிரீத்தி யாதவும், அண்ணன் கிருஷ்ணாவும் திருமணம் செய்துகொண்டனர்.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் பிரீத்தி யாதவ் ஏற்கெனவே திருமணமானவர். ரமேஷ் யாதவுடன்தான் அவருக்குத் திருமணம் நடந்துள்ளது. அரசு ரூ.51 ஆயிரம் நிதியுதவி தருகிறதே என்ற காரணத்தால் இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

இது தொடர்பான புகார் வந்ததையடுத்து சம்பந்தப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த நிர்வாக அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பிரீத்தி யாதவ், கிருஷ்ணா, ரமேஷ் யாதவ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுஉள்ளது.

இதேபோன்ற சம்பவம் கடந்த ஜனவரி மாதம் பல்லியா மாவட்டத்தில் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்ற 240ஜோடிகள் ஏற்கெனவே திருமணமானவர்கள் என்றும் அரசு நிதியுதவி பெறுவதற்காக திருமணம் செய்வது போல் நடித்தனர் என்பதும் தெரியவந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x