Published : 18 Mar 2024 07:42 AM
Last Updated : 18 Mar 2024 07:42 AM

கவிதா கைதுக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை: அமைச்சர் கிஷண் ரெட்டி விளக்கம்

கிஷண் ரெட்டி

ஹைதராபாத்: தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவின் கைதுக்கும், பாஜக.,வுக்கும் தொடர்பில்லை என மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி கூறியுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ அரூரி ரமேஷ் தனது ஆதரவாளர்களுடன் நேற்று பாஜகவில் மத்திய இணை அமைச்சரும், தெலங்கானா மாநில பாஜக தலைவருமான கிஷண் ரெட்டி முன்னிலையில் இணைந்தார். அப்போது அமைச்சர் கிஷண் ரெட்டி கூறியதாவது:

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும் மேலவை உறுப்பினருமான கவிதா கைதுக்கு சிலர் பாஜக தான் காரணம் என கூறுகின்றனர். இது தவறான கருத்தாகும். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவை நன்கு விசாரித்த பின்னரே அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர். கவிதாவின் உதவியாளர்கள், அவரின் தொழில் பங்குதாரர்களை விசாரித்த பின்னர்தான் கவிதாவை கைது செய்துள்ளனர்.

மேலும், கவிதாவின் பினாமிகளும் அப்ரூவர்களாக மாறி உள்ளனர். ஊழல் புரிந்த யாரையும் விட்டு வைக்க மாட்டோம். நீதிமன்றத்திற்கு கட்டுப்பட்டு உள்ளோம் என கவிதாவே கூறியுள்ளார். இவர் பினாமிகளுடன் கைகோர்த்து மதுபான ஊழலில் ஈடுபட்டார். தவறு அவர் செய்து விட்டு, எங்களை கை காட்டினால் எப்படி?

ஹைதராபாத்தில் ஓவைஸி தொகுதியில் பாஜக வெற்றி பெறும். தற்போது தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள் வெறும் பேனர்களில் மட்டுமே உள்ளது. செயல்பாடுகளில் இல்லை. இவ்வாறு கிஷண் ரெட்டி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x