Published : 17 Mar 2024 12:26 PM
Last Updated : 17 Mar 2024 12:26 PM

“ஊழல் செய்த எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன” - அமலாக்கத் துறைக்கு பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி: “ஊழலுக்கு எதிராக அமலாக்கத் துறை கடுமையான மற்றும் அசைக்க முடியாத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளுக்கு ஊழல் செய்த எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நேற்று ஆங்கில ஊடகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரதமர் மோடி அமலாக்கத் துறை நடவடிக்கைகளை வெகுவாகப் பாராட்டினார். அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “ஊழலுக்கு எதிரான எந்தவொரு சலுகையையும் காட்டக் கூடாது என்பதே எங்கள் அரசின் முக்கிய அம்சம்.

ஊழலுக்கு எதிராகச் செயல்பட அமலாக்கத் துறை உட்பட அனைத்து புலனாய்வு அமைப்புகளுக்கும் முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முன்புவரை புலனாய்வு அமைப்புகள் சரியாக செயல்படவில்லை. உதாரணத்துக்கு அமலாக்கத் துறையை எடுத்துக்கொள்வோம்.

2014 வரை பி.எம்.எல்.ஏ. சட்டத்தின் கீழ் 1,800 வழக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. அதுவே கடந்த 10 ஆண்டுகளில் 4,700 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2014 வரை ரூ.5,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், 10 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புகார்களும் 10 மடங்கு அதிகரித்துள்ளன.

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பவர்கள், சைபர் கிரைம் மற்றும் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்ட பல நபர்களை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. மேலும் பெரிய அளவிலான குற்றங்களையும் முறியடித்துள்ளது.

இப்படி ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கும்போது சிலருக்கு பிரச்சினைகள் எழுவது இயற்கை. ஊழல் செய்தவர்களை புலனாய்வு அமைப்புகள் விடவே விடாது. இதன் காரணமாக எதிர்க்கட்சிகள் இரவும் பகலும் மோடியை அசிங்கப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இந்த நாடு அவர்கள் பேச்சைக் கேட்பதில்லை.

தேர்தல் விரைவில் நெருங்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் காகிதத்தில் கணக்கிட்டு பகல் கனவு காண்கிறார்கள். ஆனால், மோடி கனவுகளைத் தாண்டி உத்தரவாதம் அளித்து வருகிறார். இம்முறை மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பது விரைவில் தெரியும். அப்போது உங்கள் கனவுகளும் கலைந்துவிடும்” என்று பிரதமர் மோடி ஆவேசமாகப் பேசினார்.

அமலாக்கத் துறை போன்ற புலனாய்வு அமைப்புகள் மத்திய அரசின் கைப்பாவையாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், பிரதமர் மோடி அமலாக்கத் துறையை பாராட்டி இருப்பது கவனிக்கத்தக்க நிகழ்வாக அமைந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x