Last Updated : 12 Mar, 2024 05:59 AM

2  

Published : 12 Mar 2024 05:59 AM
Last Updated : 12 Mar 2024 05:59 AM

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க மாட்டோம்: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தகவல்

டி.கே.சிவகுமார்

பெங்களூரு: பெங்களூருவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் தமிழகத்துக்கு எக்காரணம் கொண்டும் காவிரி நீரை திறந்துவிட மாட்டோம் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

காவிரியில் தமிழகத்துக்கு நீர்திறக்கப்படுவதை கண்டித்து மண்டியாவில் நேற்று முன்தினம்கர்நாடக விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அப்போது விவசாய சங்கத் தலைவர் கோடியள்ளி சந்திரசேகர், ''மைசூரு, மண்டியா விவசாயிகளின் விவசாயதேவைக்கு காவிரி நீர் திறக்கப்படவில்லை. பெங்களூருவில் குடிநீர் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு நீர் வழங்கப்படவில்லை. ஆனால் தமிழகத்துக்கு மட்டும் நீரை திறந்துவிடுவது ஏன்?'' என கேள்வி எழுப்பினார்.

இதனிடையே கர்நாடக பாஜகதலைவர் விஜயேந்திரா, ‘‘கர்நாடகாவில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுகவுடன் மக்களவைத் தேர்தல் கூட்டணி அமைத்துள்ளது. அதன் காரணமாகவே பெங்களூருவுக்கு நீரை திறந்துவிடாமல், தமிழகத்துக்கு நீரை திறந்துவிட்டுள் ளது. கர்நாடகாவுக்கு துரோகம் செய்த காங்கிரஸூக்கு தேர்தலில் மக்கள் தக்கப்பாடம் புகட்ட வேண்டும்''என விமர்சித்தார்.

டி.கே.சிவகுமார் மறுப்பு: இதுகுறித்து கர்நாடக துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் பெங்களூருவில் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

பெங்களூருவுக்கு தேவையான குடிநீரை வழங்குவதில் கர்நாடக அரசு உறுதியாக இருக்கிறது. காவிரி நீரைக் கொண்டு பெங்களூருவின் தாகம் தணிக்க‌ப்படும். முன்பை விடஅதிகளவிலான நீர் பெங்களூருவுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. நீரின் அளவை பொறுத்து விவசாய தேவைகளுக்கும் வழங்கப்படும்.

பெங்களூருவில் நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்துக்கு நீரை திறந்துவிடும் பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் எக்காரணம் கொண்டும் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட மாட்டோம். இப்போது கோடை காலமாக இருப்பதால், காவிரி ஆறு முற்றிலுமாக வறண்டு போய் உள்ளது.

இந்த நிலையில் கர்நாடகா காவிரி நீரை திறந்துவிட்டால், தமிழகத்தை சென்றடைய 4 நாட்கள் ஆகும். எனவே காவிரி நீரை திறந்துவிட்டுள்ளதாக அரசியல் உள்நோக்கத்துடன் பொய்யான தகவல்களை மக்களிடம் கொண்டு செல்லக்கூடாது என்றார். இவ்வாறு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x