Published : 08 Mar 2024 11:45 AM
Last Updated : 08 Mar 2024 11:45 AM

காங்கிரஸின் முதல் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு: வயநாட்டில் மீண்டும் ராகுல் போட்டி? 

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி

புதுடெல்லி: வரும் மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்ய அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு நேற்று (வியாழக்கிழமை) கூடியது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர்கள் பட்டியல் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். நள்ளிரவு வரை நீண்ட கூட்டத்தில் ஒரு நாளில் முடிவுகள் வெளியாகவில்லை. இன்று வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியாகலாம் என விவரம் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.

கேரளாவின் வயநாடு தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியின் பெயரை கேரள காங்கிரஸ் குழு பரிந்துரைத்துள்ளது. தற்போது வயநாடு மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருக்கும் ராகுல் காந்தி மீண்டும் அங்கே போட்டியிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. என்றபோதிலும் வயநாடு தொகுதியுடன் தனது பழைய தொகுதியான அமேதியில் ராகுல் மீண்டும் போட்டியிடுவாரா என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.

அதேபோல் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அரசியல் நுழைவை தொடங்குவாரா என்பது குறித்தும் நிச்சயமற்ற நிலையே நீடிக்கிறது. மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ரேபரேலி தொகுதி உறுப்பினர் பதவியை சோனியா காந்தி விட்டுக்கொடுத்துள்ளார். பிரியங்கா காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் தொண்டர்கள் அதிக விருப்பம் கொண்டுள்ளனர்.

முதல் பட்டியிலில் வாய்ப்புகள்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடலாம். சத்தீஸ்கரில் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் ராஜ்நந்த்கான் தொகுதியிலும், தம்ரத்வாஜ் துருக் தொகுதியிலும், ஜோத்ஸ்னா மஹந்த் கோர்பாவிலும், ஷிவ் தெஹாரியா ஜான்ஜ்கிர் சம்பா தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

காங்கிரஸ் ஆட்சி நடக்கும் கர்நாடகாவில் 4- 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையான குல்பர்கா தொகுதி குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. வேட்பாளர்களுக்கான போட்டியில் கட்சியின் தேசியத் தலைவர் கார்கேவின் மருமகன் ராதாகிருஷ்ணா தோத்தாமணியின் பெயர் முன்னிலையில் இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கான நீண்ட வேட்பாளர்கள் பட்டியலை டெல்லி காங்கிரஸ் பிரிவு வழங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேட்பாளர்களின் பட்டியலைச் சுருக்குமாறு டெல்லி பிரிவுக்கு காங்கிரஸ் உயர்மட்டம் அறிவுறுத்தியுள்ளது. ஆம் ஆத்மியுடன் இணைந்து டெல்லியில் களம் காணும் காங்கிரஸ் கட்சி அங்கு 3 இடங்களில் போட்டியிடுகின்றது.

தகவல்களின் படி, சாந்தினி சவுக் மக்களவைத் தொகுதிக்கு, ஜெ.பி.அகர்வால், சந்தீப் திக்ஷித் மற்றும் அல்கா லாம்பா பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு தொகுதிக்கு, அரவிந்தர் சிங் லவ்லி மற்றும் அணில் சவுத்ரி பெயர்களும், வடமேற்கு டெல்லி தொகுதிக்கு, ராஜ்குமார் சவுகான் மற்றும் உதித் ராஜ் ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x