Published : 08 Mar 2024 06:42 AM
Last Updated : 08 Mar 2024 06:42 AM

தேர்தல் பத்திர விவரம் சமர்ப்பிக்க அவகாசம் கோரும் எஸ்பிஐ வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க கூடுதல் கால அவகாசம் கேட்டுள்ள எஸ்பிஐ வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

தேர்தல் பத்திரத் திட்டம் சட்டவிரோதமானது என்று கூறி, அந்த நடைமுறையை ரத்து செய்யஉச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. மேலும், 2019-ம்ஆண்டு முதல் தேர்தல் பத்திரம் வழங்கியது தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றுஎஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிடப்பட்டது. இதற்கு மார்ச் 6-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், “தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களைத் தரவிறக்கம் செய்து, அவற்றை வகைப்படுத்தித் தருவது சிக்கலான நடவடிக்கை. எனவே முழு விவரங்களை வெளியிடுவதற்கு ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசம் வேண்டும்” என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மார்ச் 4-ம் தேதி எஸ்பிஐ வங்கி மனு தாக்கல் செய்திருந்தது.

உச்ச நீதிமன்றம் வழங்கிய காலக்கெடுவுக்குள் எஸ்பிஐ, தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்காத நிலையில்,அந்த வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த அமைப்பின் சார்பாக வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜர் ஆனார்.

எஸ்பிஐ தாக்கல் செய்த கால அவகாச மனுவுடன் சேர்த்து இந்த அவமதிப்பு வழக்கையும் விசாரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனு முறையாக சரிபார்க்கப்பட்டு பட்டியலிடப்பட்டால், எஸ்பிஐ வங்கியின் கூடுதல் அவகாசம் கோரிய வழக்குடன் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்” என்று பதில் அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x