Last Updated : 07 Mar, 2024 05:42 PM

5  

Published : 07 Mar 2024 05:42 PM
Last Updated : 07 Mar 2024 05:42 PM

பாஜகவில் வருண் காந்தி ‘புறக்கணிப்பு’ - தேர்தல் போட்டியில் இருந்து விலக மேனகா திட்டம்?

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் பிலிபித் தொகுதியின் எம்.பி.யான வருண் காந்திக்கு பாஜக மீண்டும் போட்டியிட வாய்ப்பளிப்பது கேள்விக்குறியாகி விட்டது. மகனுக்கு வாய்ப்பு கிடைக்காவிடில் முன்னாள் மத்திய அமைச்சரான தாய் மேனகா காந்தி, தேர்தலில் இருந்து விலகும் வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது.

மக்களவைத் தேர்தலுக்கு முதல் கட்சியாக பாஜக தனது சுமார் 200 வேட்பாளர்கள் பட்டியலை கடந்த வாரம் வெளியிட்டது. இதில், அதிக தொகுதிகளாக 80 கொண்ட உத்தரப் பிரதேசத்தில் 29 வேட்பாளர்கள் இடம் பெற்றிருந்தனர். இம்மாநிலத்தின் முக்கிய எம்.பிக்களான மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் (காஜியாபாத்), முன்னாள் மத்திய அமைச்சரான மேனகா காந்தி (சுல்தான்பூர்), மகன் வருண் காந்தி (பிலிபித்) உள்ளிட்டோர் பெயர்கள் இடம்பெறவில்லை.

இவர்களில், தாய் மேனகா மற்றும் மகன் வருணுக்கு மீண்டும் பாஜக போட்டியிட வைக்கும் வாய்ப்புகள் தெரியவில்லை. இதனால் வருண் காந்தியின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது. இதன் காரணமாக, வருணின் தாயான மேனகா காந்தி, இனி தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளதாக கருதப்படுகிறது.

கடந்த 1998-இல் காங்கிரஸின் தலைவரான சோனியா, 1999 முதல் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பியாகி வந்தார். வரும் தேர்தலில் அவர் இனி போட்டியிடப் போவதில்லை என முடிவு செய்தார். பிறகு ராஜஸ்தானிலிருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் சார்பில் 77 வயதான சோனியா தேர்வாகி உள்ளார். எனவே, மாநிலங்களவையில் மேனகாவுக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றாலும் அவர், மக்களவைத் தேர்தல் போட்டியில் இருந்து நிரந்தரமாக விலகுவார் எனக் கருதப்படுகிறது.

2014-இல் சுல்தான்பூர் எம்.பியான வருண், 2019-இல் அந்தத் தொகுதியில் தன் தாயான மேனகாவை மாற்றிவிட்டு பிலிபித்தில் போட்டியிட்டார். கடந்த இரண்டு வருடங்களாக வருண், தம் கட்சியான பாஜகவை விமர்சிக்கத் துவங்கினார். இதனால், வருண் காங்கிரஸுக்கு சென்று விடுவார் எனவும், அல்லது சமாஜ்வாதியிலும் இணைவதாகவும் செய்திகள் வெளியாயின. இந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி ஆதரவுடன் உ.பியின் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் எனவும் பேசப்பட்டது.

இதுபோன்ற செய்திகளால், வருண் மீது பாஜக தலைமை அதிருப்தியாக உள்ளது. எனினும், ஓரிரு மாதங்களாக வருணின் கட்சிக்கு எதிரான நடவடிக்கை எதுவும் இல்லை. கடந்த வருடம் நாடாளுமன்றத்தின் பழைய கட்டிடத்தில் அனைத்து எம்.பிக்களுடனான கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜகவின் மூத்த எம்.பியாக உள்ள மேனாகாவிற்கும் பேசும் வாய்ப்பு கிடைத்தது. இதில், எட்டாவது முறை எம்.பியான மேனகா, பிரதமர் நரேந்திர மோடியையும் பாராட்டி பேசினார். எனவே, பாஜகவின் முடிவு இந்த தாயும், மகனும் மீது என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தேசிய அளவில் கூடி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x