Published : 05 Mar 2024 11:34 PM
Last Updated : 05 Mar 2024 11:34 PM

சந்தேஷ்காலி வழக்கு: ஷேக் ஷாஜகானின் ரூ.12.78 கோடி சொத்துகள் முடக்கம்

ஷேக் ஷாஜகான்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாலியல் வன்கொடுமை, நில அபகரிப்பு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகானுக்கு சொந்தமான ரூ.12.78 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதனை அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.

ரேஷன் பொருட்கள் கடத்தல், நில அபகரிப்பு, பாலியல் வன்கொடுமை என பல்வேறு குற்றச் செயல்களில் ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்களும் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்துள்ளனர். சந்தேஷ்காலி தீவுப் பகுதியில் 10 கி.மீ தூரத்துக்கு உள்ள பழங்குடியினரின் நிலங்களை ஷாஜகான் ஆக்கிரமித்துள்ளார். பழங்குடியின பெண்களை கட்சி அலுவலகத்துக்கு இரவில் வரச் சொல்லி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவருக்கு எதிராக போலீஸில் புகார் கொடுத்தால், ஷாஜகான் மீது உள்ளூர் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடாதவர்களை சித்ரவதை செய்துள்ளனர்.

ஹாஜகான் அராஜகத்தை பொறுத்துக் கொள்ள முடியாத சந்தேஷ்காலி மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதையடுத்து சந்தேஷ்காலியில் ஷாஜகானுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை கடந்த ஜனவரி 5-ம் தேதி சோதனை நடத்தியது. அப்போது அமலாக்கத் துறை அதிகாரிகளை ஷாஜகான் ஆதரவாளர்கள் சுற்றிவளைத்து தாக்கினர். அதன்பின் ஷாஜகான் தலைமறைவானார். சுமார் 55 நாட்களுக்கு பிறகு கடந்த பிப்ரவரி 29-ம் தேதி அன்று அவரை கைது செய்தது மேற்கு வங்க காவல் துறை. அதோடு அவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது மாநில காவல் துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக பணமோசடி விவகாரத்தில் அமலாக்கத் துறை விசாரணையை தொடங்கியது. தற்போது முடக்கப்பட்டுள்ள ரூ.12.78 கோடி மதிப்பிலான சொத்துகளில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலம் மற்றும் இரண்டு வங்கிக் கணக்குகளும் அடங்கும்.

கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கினை சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபரை பாதுகாக்கும் நோக்கிலும், விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கிலும் செயல்பட்ட மாநில காவல் துறையின் செயலை நீதிமன்றம் கண்டித்தது. இதை எதிர்த்து மேற்கு வங்க அரசு, உச்ச நீதிமன்றத்தில் அவசர மனுவை தாக்கல் செய்தது. இருந்தும் இதனை அவசர வழக்காக எடுக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு அமலாக்கத் துறை அதிகாரிகள் தாக்கப்பட்டது குறித்து சிபிஐ, வழக்குப்பதிவு செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x