Published : 03 Mar 2024 06:02 AM
Last Updated : 03 Mar 2024 06:02 AM

மும்பை தாக்குதல் சதிகாரர் பாகிஸ்தானில் மரணம்

கடந்த 2008-ல் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் மும்பையில் தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் ஒன்றான தாஜ் ஓட்டல்.(கோப்பு படம்).

புதுடெல்லி: கடந்த 2008-ம் ஆண்டு நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலின் முக்கிய சதிகாரர்களில் ஒருவரான ஆசம் சீமா (70), பாகிஸ்தானில் மரணம் அடைந்தார்.

பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 10 பேர் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். உலகையே உலுக்கிய இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தவிர, 2006-ம் ஆண்டு மும்பை ரயில் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் முக்கிய சதியாளர்களில் ஒருவராக இருந்தவர் ஆசம் சீமா.

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் உளவுப் பிரிவின் தலைவரான ஆசம் சீமா (70), பாகிஸ்தானின் ஃபைசலாபாத் நகரில் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக நேற்று செய்தி வெளியானது.

இதுகுறித்து உளவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பஞ்சாபி பேசக்கூடிய ஆசம் சீமா, 2000-ஆவது ஆண்டுகளின் முற்பகுதியில் பாகிஸ்தானில் உள்ள பகவல்பூரில் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். அப்போதே அவர் லஷ்கர் தீவிரவாதியாக செயல்பட்டு வந்தார்

2008-ல் லஷ்கர் அமைப்பின் பகவல்பூர் கமாண்டராக செயல்பட்டபோது, அந்த அமைப்பின் மூத்த அதிகாரி ஜக்கி-உர்-ரஹ்மான்லக்வியின் செயல்பாட்டு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அப்போது மும்பை தாக்குதலுக்காக தீவிரவாதிகளுக்கு பயிற்சி, தாக்குதலுக்கான திட்டமிடல் மற்றும் செயல்படுத்துவதில் ஆசம் சீமா பங்கேற்றார்.

வரைபடத்தில் இந்தியாவின் முக்கிய இடங்களை கண்டறிய ஜிகாதிகளுக்கு அவர் கற்றுக் கொடுத்தார். 2000-ஆவது ஆண்டுகளின் நடுப்பகுதியில் இந்தியா முழுவதும் இருந்த லஷ்கர் தீவிரவாதிகளுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி மூலம் உத்தரவுகளை பிறப்பித்து வந்தார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்லேடனுடன் தொடர்பு: சர்வதேச தீவிரவாதிகள் யாரும்தங்கள் மண்ணில் இல்லை என்றுபாகிஸ்தான் மறுத்துவந்த போதிலும் அத்தகைய தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருப்பதை ஆசம் சீமாவின் மரணம் பற்றிய செய்தி உறுதிப்படுத்தியுள்ளது.

சீமாவை, லஷ்கர் அமைப்பின் முக்கிய கமாண்டர் எனவும் அவருக்கு ஒசாமா பின்லேடனின் அல்-காய்தா அமைப்புடன் நெருங்கியத் தொடர்பு இருந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x