Published : 27 Feb 2024 03:13 PM
Last Updated : 27 Feb 2024 03:13 PM

“கேரளாவுக்குள் எதிரிகள்... வெளியே பிபிஎஃப்!” - காங்., கம்யூ. மீது பிரதமர் மோடி விமர்சனம்

திருவனந்தபுரம்: “கேரளாவுக்கு வெளியே காங்கிரஸும் கம்யூனிஸ்ட் கட்சியும் பிபிஎஃப் (BFF) அதாவது, பெஸ்ட் ஃப்ரெண்ட் ஃபார் எவர் (Best Friends Forever)” என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "கேரள மக்களின் உற்சாகம் பல்வேறு அளவில் இருப்பதைப் பார்க்க முடிகிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது பாஜக மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை, 2024 மக்களவைத் தேர்தலின்போது உறுதிப்பட்ட நிலையை அடைந்திருக்கிறது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் கேரள மக்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இரட்டை இலக்க வாக்கு சதவீதத்தை அளித்தார்கள். 2024 மக்களவைத் தேர்தலில் இரட்டை இலக்க வெற்றியை அளிப்பார்கள். 2019 மக்களவைத் தேர்தலின்போது மீண்டும் மோடி அரசு எனும் முழக்கத்தை நாடு கொடுத்தது. 2024 மக்களவைத் தேர்தலில், 400 தொகுதிகளில் வெற்றி எனும் முழக்கத்தை கொடுத்திருக்கிறது.

2024 மக்களவைத் தேர்தல் தோல்வியை எதிர்க்கட்சிகள் தற்போதே ஒப்புக்கொண்டு விட்டன. நாட்டை எவ்வாறு வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்வது என்பதற்கான எந்த திட்டமும் அவர்களிடம் இல்லை. என்னை திட்டுவது என்ற ஒரே ஒரு திட்டம் மட்டுமே அவர்களிடம் இருக்கிறது. இதுபோன்ற எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் பக்கம் கேரளா ஒருபோதும் நிற்காது என்பது எனக்குத் தெரியும்.

நாட்டின் வளர்ச்சிக்காக பாஜகவையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியையும் கேரளா ஆசீர்வதிக்கும். பாஜகவோடு மக்கள் தோளோடு தோள் கொடுத்து இணைந்து பயணிக்கிறார்கள். இதுகூட ஒரு மிகப் பெரிய செய்திதான்.

பாஜக எந்த ஓர் இந்திய மாநிலத்தையும் வாக்கு வங்கி கண்ணோட்டத்தில் பார்த்ததில்லை. கேரளாவில் பாரதிய ஜனதா கட்சி வலுவாக இல்லாதபோதும், கேரளாவுக்கு அதிகாரம் அளிக்க நாங்கள் நாள் தோறும் உழைத்தோம். கடந்த 10 ஆண்டுகளில், பாஜக ஆளும் மாநிலங்களுக்கு கிடைத்தது போன்ற வளர்ச்சியின் பலனை கேரளாவும் பெற்றிருக்கிறது.

மூன்றாவது முறையாக மோடி ஆட்சி என்றே எல்லோரும் பேசுகிறார்கள். எங்கள் மூன்றாவது ஆட்சியில், இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற உள்ளது. இது மோடியின் உத்தரவாதம். எங்கள் மூன்றாவது ஆட்சியில், ஊழலுக்கு எதிரான போராட்டம் இன்னும் வரையறுக்கப்பட்டதாக இருக்கும்.

கேரளாவில், சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியவற்றின் மோசமான ஆட்சியை நீங்கள் ஒவ்வொருவரும் பார்த்திருக்கிறீர்கள். நம்பிக்கை கீற்றாக மக்கள் பாஜகவை பார்க்கிறார்கள். கேரளாவின் கல்வித்துறைக்கு இடது ஜனநாயக முன்னணியும், ஐக்கிய ஜனநாயக முன்னணியும் என்ன செய்தன என்பது அனைவருக்கும் தெரியும்.

உயர்கல்வி படிக்கும் போது கேரளாவின் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அனைவரும் அறிவர். எங்கள் மூன்றாம் முறை ஆட்சியில், கேரளாவின் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய பணிகளை நாங்கள் செய்வோம். இது ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும்.

கேரளாவில் பாஜக இதுவரை ஆட்சிக்கு வந்ததில்லை. ஆனால், எனது அரசின் சாதனையை உங்கள் முன் வைத்துள்ளேன். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணிகளுக்கு ஒரே ஒரு முன்னுரிமை மட்டுமே உள்ளது. தங்கள் குடும்பம் மட்டுமே நாட்டை ஆள வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம். அவர்களுக்கு இந்தியர்களின் நலனைவிட தங்கள் குடும்பத்தின் நலன் மிகவும் முக்கியம்.

காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் கேரளாவில் ஒருவருக்கொருவர் எதிரிகள். ஆனால், கேரளாவுக்கு வெளியே அவர்கள் BFF. அதாவது, Best Friends Forever (எப்போதும் சிறந்த நண்பர்கள்)" என்று பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x