Last Updated : 24 Feb, 2024 08:46 PM

18  

Published : 24 Feb 2024 08:46 PM
Last Updated : 24 Feb 2024 08:46 PM

விவசாயிகள் போராட்டம்: பாஜகவின் புதிய உத்திகள் பலன் தருமா? - ஒரு பார்வை

இளம் விவசாயி மரணம், போலீஸார் காயம், முடக்கப்பட்ட விவசாயிகள் எக்ஸ் தளங்கள்... விமர்சனமாகும் டெல்லி விவசாயிகள் போராட்டக் களம். மேலும், சென்றமுறை விவசாயிகள் போராட்டத்தை பாஜக அரசு அணுகியதற்கும் இந்த முறை அணுகுவதற்கு வித்தியாசங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு மாற்றமா? - அது பற்றி சற்றே விரிவாகப் பார்ப்போம்.

கடந்த 2020-ம் ஆண்டு விவசாயிகள் வேளாண் சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராட்டத்தை நடத்தினர். அப்போதே குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கையை முன்வைத்திருந்தனர். ஆனால், மத்திய அரசு அதை நிறைவேற்றவில்லை என்னும் குற்றச்சாட்டை முன்வைத்து கடந்த 13-ம் தேதி மீண்டும் போராட்டத்தை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், பஞ்சாப் எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கும் ஹரியாணா போலீஸுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இளம் விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்தார். இது விவசாயிகள் மத்தியில் பெரும் கொத்தளிப்பை ஏற்படுத்தியது. ’இதை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும்’ என விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இதனால், அரசின் பேச்சுவார்த்தைக்கு வர விவசாயிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொது செயலாளர் ஜெயராம் ரமேஷ், “குறைந்தபட்ச விலைக்கு உத்தரவாதம் கேட்டால் பிரதமர் மோடி தோட்டாக்களுக்கு உத்தரவாதம் தருகிறார்” என விமர்சித்திருந்தார்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து வியாழக்கிழமை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்கள் கலந்து கொண்டனர். இது தொடர்பாக கொலை வழக்குப் பதிய வேண்டும் என்றும், அவர் குடும்பத்துக்கு ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிகை வைத்தனர். இந்த நிலையில் பஞ்சாப் அரசாங்கம் அவர் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாயும், அவரின் சகோதரிக்கு அரசு வேலையும் அறிவித்துள்ளது.

என்ன செய்கிறது மத்திய அரசு? - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் 177 எக்ஸ் சமூக வலைதளப் பக்கங்களை முடக்குமாறு எக்ஸ் தளத்துக்கு கோரிக்கை வைத்திருந்தது. இந்நிலையில், அந்தக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. எனினும், இந்திய அரசின் உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும், கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக இது இருப்பதாகவும் அந்த நிறுவனம் கவலை தெரிவித்திருந்தது.

அதே சமயம், 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தை முன்னின்று நடத்திய பாரதிய கிஷான் யூனியன் தற்போது நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்குபெறவில்லை. விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருக்கிறது. எனவே, ’தற்போதைய போராட்டம் அரசியல் நோக்கில் மக்களவைத் தேர்தலை குறிவைத்தே தொடங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் விவசாயிகளைத் தூண்டிவிடுகிறது’ என்று பாஜகவினர் குற்றம்சாட்டை முன்வைக்கின்றனர்.

எனினும், விவசாயிகள் போராட்டம் பாஜக அரசுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. குறிப்பாக, கடந்த முறை நடந்த போராட்டத்தால் பாஜகவின் பெயர் பெரிதும் அடிவாங்கியது. இறுதியாக வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது. தற்போது, மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் விவசாயிகள் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியிருப்பது பாஜகவுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால்,எக்ஸ் தள கணக்குகள் முடக்கம் என இறங்கி வருகிறது மத்திய அரசு என்னும் விமர்சனம் வைக்கப்படுகிறது.

இருப்பினும், முன்பு நடந்த போராட்டத்தில் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதில் அரசிடம் சில குறைபாடுகள் இருந்தன. குறிப்பாக, விவசாயிகளை தீவிரவாதிகள் என விமர்சித்தனர். ஆனால், இந்த முறை மத்திய வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா, வணிகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் உள்துறை இணையமைச்சர் நித்யானந் ராய் ஆகியோர் பல கட்டங்களாக விவசாய சங்க பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கின்றனர். இதன் வாயிலாகப் பாஜக தங்களை விவசாயிகள் போராட்டத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள நினைக்கிறது தெரிகிறது எனும் கருத்துகளும் சொல்லப்படுகிறது.

பாஜக - ஆம் ஆத்மி அரசியல்: அதேநேரம், ஹரியாணாவில் பாஜக அரசு ஆட்சியில் இருக்கிறது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மியை மத்திய அரசு டார்க்கெட் செய்கிறதோ என்னும் கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, தற்போது பஞ்சாப்பில் இறந்த விவசாயிக்கு ஒரு கோடி அறிவித்தார் ஆம் ஆத்மியின் பஞ்சாப் முதல்வர் பகவத் மான் . இந்த நிலையில், கொலை வழக்கில் உரிய நபரை கைது செய்யச் சொல்லி விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். ஆனால், அப்படி செய்தால் ஹரியாணா அரசுக்கு எதிராக நடப்பதாக ஆகிவிடும். ஆனால், வழக்குப் பதியாமல் இருந்தால், அது ஆம் ஆத்மிக்கு கெட்டப் பெயரை உண்டாக்கும். எனவே, இப்போதைக்கு நிவாரணம் அறிவித்துவிட்டு ’சேஃப் சோனில்’ ஆம் ஆத்மி செயல்படுகிறது.

ஆனால், இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி பக்கம் விவசாயிகளைத் திருப்ப பாஜக முயற்சிப்பதாகவும் கருத்துக்களும் சொல்லப்படுகிறது. மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் பாஜகவுக்கு இது அடியாக விழும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனவே, இதைத் தடுக்க பாஜக தீவிரம் காட்டுகிறது. அதேவேளையில், பஞ்சாப் விவசாயிகளைத் தாக்கி ஆம் ஆத்மிக்கு அரசுக்கு இக்கட்டான சூழலை உருவாக்க பாஜக எண்ணுகிறது என்றும் சொல்லப்படுகிறது. தவிர, பாஜக விவசாயிகளை நடத்தும் விதம், மற்ற மாநில விவசாயிகளுக்குப் பாஜக மீது வெறுப்பு உண்டாக்கலாம் எனவும் கருத்து சொல்லப்படுகிறது.

தேர்தல் நெருங்க நெருங்க இன்னமும் பல காட்சிகள் அரங்கேறக் கூடும் என்றும், இதன் தாக்கங்களை காத்திருந்துதான் அறிய முடியும் என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள். எது எப்படியோ விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்பதில் மத்திய, மாநில அரசுகள் இனியும் தாமதிக்கக் கூடாது என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x