Published : 24 Feb 2024 06:49 AM
Last Updated : 24 Feb 2024 06:49 AM

மார்ச் 13-ம் தேதிக்கு பிறகு மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு?

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையின் பதவிக் காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது.இதைத் தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

அத்துடன் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட சில மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இறுதிகட்ட ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.

வரும் மார்ச் 8 அல்லது 9-ம் தேதி ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் மற்றும் தேர்தல் பணிக்கு தேவையான துணை ராணுவப் படைகள் குறித்து மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்த உள்ளது.

அத்துடன், மார்ச் 12, 13-ம் தேதிகளில் ஜம்மு - காஷ்மீர் செல்லும் இக்குழுவினர், மக்களவைத் தேர்தலுடன் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கும் தேர்தல் நடத்தலாமா என்பது குறித்து கள ஆய்வுகளை நடத்த உள்ளனர்.

எனவே, வரும் மார்ச் 13-ம் தேதிக்குப் பிறகு மக்களவை பொதுத் தேர்தல் குறித்த அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு மார்ச்10-ம் தேதி மக்களவை பொதுத்தேர்தல் தொடர்பான அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன்படி, அந்த ஆண்டு ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு சுமார் 97 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் மக்களவைத் தேர்தலுடன் இணைந்து ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறஉள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x