Last Updated : 24 Feb, 2024 08:02 AM

1  

Published : 24 Feb 2024 08:02 AM
Last Updated : 24 Feb 2024 08:02 AM

கர்நாடகாவில் புதிய சட்ட திருத்தத்தால் சர்ச்சை: இந்து கோயில்களுக்கு 10 சதவீதம் வரி விதிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் ப‌ட்ஜெட் கூட்டத்தொடரில் கடந்த வியாழக்கிழமை முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ‘கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலையத்துறை (திருத்தம்) மசோதா'வை நிறைவேற்றியது. இந்த சட்டத் திருத்தத்தின்படி, ஆண்டுக்கு ரூ. 1 கோடிக்கும் அதிகமாக வருமானம் வரும் இந்து கோயில்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருமானம் உள்ள இந்து கோயில்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத் திருத்தத்துக்கு பாஜக, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம்ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதை உடனடியாக திரும்ப பெற வேண்டும். பிற மதங்களின் வழிபாட்டு தலங்களுக்கு ஏன் வரி விதிக்கப்படவில்லை என அந்த கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா கூறியதாவது: ஆளும் காங்கிரஸ் அரசு இந்துக்களுக்கு எதிரான மனநிலையை கொண்டுள்ளது. சித்தராமையா அரசு தவறான திட்டங்களுக்கு அதிகளவில் நிதியை செலவிடுகிறது. அதனால் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி இல்லாமல் தள்ளாடுகிறது.

இதனை சமாளிக்க இந்து கோயில்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்து கோயில்களின் வருமானத்தை பிற திட்டங்களுக்கு செலவிடுவதை ஏற்க முடியாது. காணிக்கை செலுத்தும் பக்தர்கள் அந்தப் பணத்தில் கோயிலை புதுப்பிக்கவும், பராமரிக்கவும் வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள். இந்து கோயில்களுக்கு வரி விதிக்கும் முறையை முஸ்லிம் மன்னர்கள் அறிமுகப்படுத்தினர். இதனை இப்போது சித்தராமையா செய்திருக்கிறார். இதனை ஒருபோதும் ஏற்க முடியாது. இவ்வாறு விஜயேந்திரா தெரிவித்தார்.

முதல்வர் சித்தராமையா கூறியதாவது: இந்த சட்டத்தை புதிதாக நாங்கள் கொண்டு வரவில்லை. கடந்த 2003-ம் ஆண்டில் இருந்தே இந்துகோயில்களுக்கு வரி வசூலிக்கப்படுகிறது. இப்போது எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக, மஜத ஆட்சியிலும்இந்த சட்டம் அமலில் இருந்தது.நாங்கள் அந்த சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம். 5 சதவீதமாக‌ இருந்த வரியைநாங்கள் 10 சதவீதமாக உயர்த்தி இருக்கிறோம்.

பாஜகவினர் இத‌னை குறைக்கசொல்லாமல், இந்துகளுக்கு எதிரான சட்டம் என கூறுகின்றனர். இந்தபணம் அர்ச்சகர்களின் நலன்,கோயில் புனரமைப்பு, யாத்ரீகர்களுக்கான வசதிகள் ஆகியவற்றுக்காகவே பயன்படுத்தப்படும். ஒரு போதும் வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படாது.

ஆனால் பாஜக தலைவர்கள் அடிப்படை ஆதாரமற்ற பொய்களின் மூலம் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர். வகுப்புவாத அரசியல் மூலம் வாக்குகளை அறுவடை செய்ய முயற்சிக்கும் பாஜகவினர் வெட்கப்பட வேண்டும். இவ்வாறுசித்தராமையா தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் கண்டனம் - இந்த சட்டத் திருத்தம் குறித்து மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியதாவது: ராகுல் காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் வீழ்ச்சி அடைந்ததற்கு என்ன காரணம் என்பதுஇப்போது புரிகிறது. சித்தராமையாவும், டி.கே. சிவகுமாரும் ராகுல்காந்தியால் தேர்வு செய்யப்பட்டவர்கள். இந்து பக்தர்கள் காணிக்கையாக கோயில்களுக்கு தரும் பணத்தை எடுக்கும் அதிகாரத்தை காங்கிரஸுக்கு யார் கொடுத்தது? காங்கிரஸுக்கு இருக்கும் பல்வேறு தேவைகளுக்காகவே கர்நாடக அரசு இந்த‌ கொள்ளையை நிகழ்த்துகிறது. இவ்வாறு அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x