Published : 22 Feb 2024 05:00 PM
Last Updated : 22 Feb 2024 05:00 PM

“கமல்நாத் தேவையில்லை... கதவுகள் மூடல்” - சொல்கிறது ம.பி பாஜக

கமல்நாத் | கோப்புப்படம்

ஜபல்பூர் (மத்தியப் பிரதேசம்): “பாஜகவுக்கு கமல்நாத் தேவையில்லை, அவருக்கான பாஜகவின் கதவுகள் மூடப்பட்டுவிட்டன” என்று மத்தியப் பிரதேச அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கமல்நாத் பாஜகவில் இணையப் போகிறாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த பாஜகவின் முன்னாள் தேசிய பொதுச் செயலரான கைலாஷ் விஜய்வர்கியா, “எங்கள் கட்சிக்கு கமல்நாத் தேவையில்லை என்று நான் முன்பே சொல்லியிருந்தேன். அதனால்தான் அவருக்கான பாஜகவின் கதவுகள் மூடப்பட்டன" என்றார்.

தொடர்ந்து தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியை ஒப்படைப்பது பற்றிய திக்விஜய் சிங் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த பாஜக அமைச்சர், “அந்த மூத்த காங்கிரஸ் தலைவரும் அவரைப் போன்றவர்களும் விரக்தியடைந்துள்ளனர். அவரது கட்சித் தலைவர் தேவையற்றவர் ஆகிவிட்டதால் அவர்களது எதிர்காலம் இருண்டு விட்டது என்பதை அவர்கள் அறிவார்கள். அதனால் விரக்தியில் அவர்கள் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்" என்று கூறினார்.

கமல்நாத்தும், எம்.பி.யான அவரது மகன் நகுல்நாத்தும் கடந்த வாரத்தில் டெல்லி சென்றிருந்த நிலையில், அவர்கள் அணி மாறப் போகிறார்கள் என்ற ஊகத்துக்கு வழிவகுத்தது. என்றாலும், 77 வயதான மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத் பாஜகவில் இணையப் போகிறார் என்ற ஊகத்தை காங்கிரஸ் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கமல்நாத்தின் அடுத்த அரசியல் நகர்வு குறித்த ஊகங்களுக்கு மத்தியில் அவரது கோட்டையான சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள பல உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் புதன்கிழமை பாஜகவில் இணைந்தனர் என்பது கவனிக்கத்தக்கது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x