Published : 28 Feb 2018 01:11 PM
Last Updated : 28 Feb 2018 01:11 PM
நீட் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வயது வரம்பு விதிமுறைகளை சிபிஎஸ்இ வகுத்திருந்தது. இதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்த அறிவிப்பை சிபிஎஸ்இ கடந்த 7-ம் தேதி வெளியிட்டது. இதில் நாடு முழுவதும் நீட் தேர்வு வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.
நீட் தேர்வுக்கு மாணவர்கள் மார்ச் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான கட்டணத்தை மாரச் 10-ம் தேதி நள்ளிரவு 11.50 வரை கட்டணம் செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
நீட் தேர்வுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், தகுதிகள் என்ன என்பது குறித்து சிபிஎஸ்இ சில வரைமுறைகளை வகுத்து அளித்து இருந்தது.அதில் குறிப்பாக பொதுப்பிரிவு மாணவர்கள் மருத்துவப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அதிபட்ச வயது 25 ஆகவும், எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 30 வயதுவரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும், 12-ம் வகுப்பை பள்ளியில் படிக்காமல், தனியாகத் தேர்வு எழுதியவர்கள், உயிரியியல் பாடத்தை கூடுதலாக எடுத்துப் படித்த மாணவர்கள், 11,12-ம் வகுப்பை முடிக்க கூடுதலாக 2 ஆண்டுகள் எடுத்துக்கொண்டவர்கள், டுடோரியல் காலேஜில் படித்து 12-ம் வகுப்பு தேறியவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது என்ற விதிமுறை வகுக்கப்பட்டு இருந்தது.
சிபிஎஸ்இ வகுத்த இந்த வயது வரம்பு விதிமுறைகளை எதிர்த்தும், பல்வேறு விதிமுறைகளை எதிர்த்தும் பல்வேறு தரப்பினர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சந்திர சேகர் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சிபிஎஸ்இ வயது வரம்பு விதிமுறைகளுக்கு தடைவிதித்தனர். மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
அதேசமயம், தனியாக 12-ம் வகுப்பு தேர்வு எழுதி தேறியவர்கள், டுடோரியல் காலேஜில் படித்து தேறியவர்கள், தகுதியான அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தின் மூலம் படித்து தேறி இருந்தால், அந்த மாணவர்களும் நீடி தேர்வு எழுதுவதற்கு தடை இல்லை என உத்தரவிட்டனர்.
இந்த வழக்கின் மீதான அடுத்த விசாரணை ஏப்ரல் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT