Published : 19 Feb 2024 06:07 AM
Last Updated : 19 Feb 2024 06:07 AM

பழங்குடி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் சிக்கிய திரிணமூல் பிரமுகர் செல்வாக்கு பெற்றது எப்படி?

ஷேக் ஷாஜகான்

கொல்கத்தா: மேற்குவங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் சந்தேஷ்காலி தீவுப் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதி திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக ஷேக் ஷாஜகான் (50) செயல்பட்டு வந்தார். ரேஷன் பொருட்களை முறைகேடாக விற்பனை செய்த வழக்கில் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இந்த வழக்கின் விசாரணைக்காக கடந்த ஜனவரி 5-ம் தேதி அதிகாலை அமலாக்கத் துறை அதிகாரிகள், சந்தேஷ்காலியில் உள்ள ஷேக் ஷாஜகானின் வீட்டுக்கு சென்றனர். அப்போது அவரும் அவரது ஆதரவாளர்களும் அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது கொடூர தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடி விட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஷேக் ஷாஜகானின் சட்டவிரோத செயல்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கி உள்ளன. குறிப்பாக சந்தேஷ்காலி உள்ளிட்ட 16 ஊராட்சிகளை சேர்ந்த பழங்குடி பெண்கள் ஷாஜகான் மீது பாலியல் வன்கொடுமை புகார்களை கூறி உள்ளனர்.

பழங்குடி பெண்கள் கடத்தல்: கடந்த சில நாட்களாக நூற்றுக்கணக்கான பெண்கள் சாலை, தெருக்களில் திரண்டு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த நாட்டின் கவனமும் சந்தேஷ்காலி மீது திரும்பி உள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த 10 பழங்குடி பெண்கள் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஷேக் ஷாஜகானும் அவரது ஆதரவாளர்களும் இரவில் ஒவ்வொரு வீடாக சென்று அழகான இளம் பெண்களை கட்சி அலுவலகத்துக்கு அழைத்துச் செல்வர்.விருப்பம் இல்லாத பெண்களைவலுக்கட்டாயமாக கடத்திச் செல்வார்கள். கட்சி அலுவலகத்துக்கு இரவில் அழைத்துச் செல்லப்படும் பெண்கள் பொழுது விடிந்த பிறகே வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.

கடந்த 13 ஆண்டுகளாக பழங்குடி பெண்களை ஷாஜகானும் அவரது ஆதரவாளர்களும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சில பெண்கள் மட்டும் துணிச்சலாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் போலீஸார் அந்த பெண்கள் மீதே வழக்கு பதிவு செய்து கொடுமைபடுத்தினர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

உள்ளூர் விவசாயிகள் கூறும்போது, “நாங்கள் பழங்குடிகள். ஷாஜகானும் அவரது ஆதரவாளர்களும் எங்களது நிலங்களை ஆக்கிரமித்து இறால் பண்ணைகளை அமைத்து உள்ளனர். சுமார் 15,000 ஏக்கர் நிலத்தை ஷாஜகான் ஆக்கிரமித்துள்ளார். எங்களது நிலங்களை மீட்டுக் கொடுக்க வேண்டும்" என்றனர்.

யார் இந்த ஷாஜகான்? கடந்த 2000-ம் ஆண்டுகளில் உள்ளூர் மீன் வியாபாரத்தில் ஷேக் ஷாஜகான் ஈடுபட்டு வந்தார். அவரது உறவினர் முஸ்லம் ஷேக், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக இருந்தார். அவரோடு ஷாஜகானும் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தார். பின்னர் கடந்த 2013-ம்ஆண்டில் திரிணமூல் காங்கிரஸில் ஷாஜகான் இணைந்தார். இறால் பண்ணைகள், செங்கல் சூளைகள், உள்ளூர் தொழிலதிபர்களிடம் பணம் வசூல் என சந்தேஷ்காலியின் அசைக்க முடியாத தலைவராக அவர் உருவெடுத்தார். இதன்காரணமாக ஏக்கர் கணக்கில் நிலம், சொகுசு வீடுகள், 17 சொகுசு கார்கள், பல கோடி மதிப்புடைய சொத்துகள் அவரிடம் குவிந்தன.

உத்தம் சர்தார், ஷிபு ஹஸ்ரா ஆகியோர் ஷாஜகானின் வலது, இடது கரங்களாக செயல்பட்டனர். அவர்களது தலைமையில் 100-க்கும் மேற்பட்ட ரவுடிகளும் கூட்டுசேர்ந்து சட்டவிரோத செயல்களில்ஈடுபட்டனர். குறிப்பாக சந்தேஷ்காலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பழங்குடி பெண்களை ஷாஜகானும் அவரது ஆதரவாளர்களும் கட்சி அலுவலகங்களுக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக தற்போது பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் களம் இறங்கி உள்ளன. மாநில ஆளுநர் ஆனந்த போஸ், சந்தேஷ்காலிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் சந்தேஷ்காலிக்கு செல்ல முயற்சி செய்தனர். ஆனால் அங்கு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டு எதிர்க்கட்சி தலைவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளனர்.144 தடையுத்தரவு அமல் செய்யப்பட்டு உள்ளது. பழங்குடி பெண்கள்அளித்த புகார்கள் தொடர்பாக இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஷேக் ஷாஜகான் உள்ளிட்டோர் திரிணமூல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். தலைமறைவாக உள்ள ஷேக் ஷாஜகானை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மாநில காவல் துறை தலைவர் ராஜீவ் குமார் கூறும்போது, “சந்தேஷ்காலி விவகாரம் தொடர்பாக 10 பேர் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகிறது. அந்த குழு பாதிக்கப்பட்ட கிராமங்களில் முகாமிட்டு மக்களிடம் நேரடியாக புகார்களை பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x