Last Updated : 08 Feb, 2018 07:51 PM

 

Published : 08 Feb 2018 07:51 PM
Last Updated : 08 Feb 2018 07:51 PM

கர்நாடக தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் மஜத கூட்டணி?- மாயாவாதியுடன் தேவகவுடா பேச்சுவார்த்தை

கர்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் மாயாவதியுடன் மஜத தேசிய தலைவர் தேவகவுடா பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாஜக ஆகியவை தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிற‌து.

இதன் கட்டமாக மஜத தேசிய தலைவர் தேவகவுடா கர்நாடகாவில் வலுவாக உள்ள பகுஜன் சமாஜ் கட்சி (பி.எஸ்.பி) உடன் கூட்டணி அமைக்க முடிவெடுத்துள்ளார். எனவே அண்மையில் டெல்லி சென்ற தேவகவுடா உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான‌ மாயாவதியை சந்தித்து கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது மாயாவதி கர்நாடக மாநில நிர்வாகிகளுடன் பேசிய பின் கூட்டணி குறித்து முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இத்தகவலை கர்நாடக பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் உறுதி செய்துள்ள நிலையில், மஜத‌-வின் முதல்வர் வேட்பாளர் குமாரசாமியும் ஒப்புக்கொண்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியைப் போன்ற வேறு சிலகட்சிகளுடனும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் தலித் வகுப்பினர் பெரும்பான்மையாக வசிப்பதால், தலித் மக்களின் வாக்குகளை குறிவைத்து அரசியல் கட்சிகள் காய்களை நகர்த்தி வருகின்றன. இதன் ஒரு கட்டமாகவே முன்னாள் பிரதமர் தேவகவுடா பகுஜன் சாமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளார். கர்நாடகாவில் 50-க்கும் அதிகமான தனித் தொகுதிகள் இருப்பதால், தேவகவுடா இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x