Published : 25 Aug 2014 11:10 AM
Last Updated : 25 Aug 2014 11:10 AM

மதம் மாறக் கோரி கணவர் கொடுமை: துப்பாக்கி சுடும் வீராங்கனை புகார்

மதம் மாறக் கோரி கொடுமைப்படுத்தியதாக தனது கணவர் மீது துப்பாக்கிச் சுடும் வீராங்கனை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். கணவர் வீட்டிலிருந்து அந்தப் பெண்ணை பத்திரமாக மீட்ட போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த துப்பாக்கிச் சுடும் வீராங்கனை தாரா ஷாதேவ். ராஞ்சியில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெற்றபோது ரோஹித் கோலி என்பவர் அவருக்கு அறிமுகமானார். அவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இருவருக்கும் ராஞ்சியில் உள்ள பிரபல ஓட்டலில் கடந்த ஜூலை 7-ம் தேதி இந்து சம்பிரதாய முறையில் திருமணம் நடைபெற்றது.

ஆனால் அதற்கு அடுத்தநாள் ரோஹித் கோலியின் வீட்டில் முஸ்லிம் மத நடைமுறைப்படி இருவருக்கும் திருமணம் நடத்தப்பட்டது. அப்போதுதான் ரோஹித் கோலி முஸ்லிம் என்பதும் அவரது பெயர் ராக்கிபுல் ஹுசைன் என்பதும் தாராவுக்கு தெரியவந்தது.

தாராவை மதம் மாறும்படி கணவரும் அவரது குடும்பத் தினரும் வற்புறுத்தியுள்ளனர். அவர் மறுக்கவே அவரை பல் வேறு விதங்களில் கொடுமைப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் கட்டுப் பாட்டு அறை செல்போன் எண்ணுக்கு தாரா ரகசியமாக எஸ்.எம்.எஸ். அனுப்பினார். போலீஸார் விரைந்து செயல்பட்டு அந்த பெண்ணை, கணவர் வீட்டில் இருந்து மீட்டனர்.

தாரா அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாகி விட்ட அந்தப் பெண்ணின் கணவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x